தந்தை தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்;ஆனால் மகன் ஐ.ஏ.எஸ் ஆனார்
எட்டு வருடங்களுக்கு முன்பு தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுக்க மறுத்த ஒரே காரணத்திற்காக குலாம் ரசூல் ஷா காஷ்மீர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்.ஆனால் இன்று அவரது மகன் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி.அதுவும் இந்த ஆண்டு வெளியான ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் தேர்வு முடிவுகளில் இவர் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் ஐ.ஏ.எஸ் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெறுவது இதுவே முதல் முறை.இத்துணைக்கும் இவரது பூர்வீகம் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வார மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம்.
ஷா பைசல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஷெர்-இ-மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றவர்.தேர்வு முடிவு தெரிந்த மகிழ்ச்சியில் தன்னால் பேச இயலவில்லை என தெரிவித்த ஷா பைசல் “என்னுடைய தந்தை தீவிரவாதிகளால் கொள்ளப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்ததை என் கண்ணால் பார்த்திருக்கிறேன்.என்னுடைய வாழ்க்கையே முற்றிலும் இழந்தது போல உணர்ந்தேன்.எனக்கு கணிதம் மற்று ஆங்கிலம் சொல்லிக் கொடுத்த அவர் இந்த மகிழ்ச்சியில் பங்குகொள்ள இங்கு இல்லை” என கூறினார்.இதில் இன்னுமொரு சிறப்பு இவர் எந்த கோச்சிங் சென்டரிலும் படிக்காமல் தன் சுய முயற்சியுடன் படித்தவர் என்பது.
நம்ம தமிழக மாணவர்கள் இந்த ஆண்டும் எப்போதும் போல ஐ.ஏ.எஸ் தேர்வில் கலக்கி இருக்கிறார்கள்.தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் கோச்சிங் நிறுவனங்கள் போட்டியின் காரணமாக ஆளுக்கொரு புள்ளி விபரங்களை கொடுத்தாலும், தமிழகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தேர்வு பெற்றிருப்பது உண்மை.
குற்றவாளிகள் ஏன் பெரும்பாலும் அடித்தட்டு வர்க்கத்தில் இருந்தே வருகிறார்கள்?
சிறிய குற்றமோ அல்லது பெரிய குற்றமோ;அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி இல்லை இந்தியாவாக இருந்தாலும் சரி; குற்றவாளிகளை தேடும் பணி முதலில் ஆரம்பிப்பது அடித்தட்டு மக்கள் வாழும் பகுதிகளில் தான்.அமெரிக்காவாக இருந்தால் கருப்பர்கள் வாழும் பகுதிகளில் குற்றவாளிகளை தேடுவார்கள்.இந்தியாவாக இருந்தால் எங்காவது குப்பத்தில் தேடுவார்கள்.
ஏன்?குற்றவாளிகள் குப்பத்தில் தான் இருக்க வேண்டுமா?ஆமாம் போலிசின் உளவியல் அப்படித்தான் சொல்கிறது.
அதுபோல,இவர்கள் செய்யும் சிறு சிறு குற்றங்களுக்கும் கூட தண்டனை எப்படி இருக்கும் என சொல்லித்தெரிய வேண்டியதில்லை.சிறு திருட்டாக இருந்தாலும் சரி, அல்லது கொலைகுற்றமாக இருந்தாலும் சரி, அவர்கள் உடல் மற்றும் மன ரீதியாக உச்ச பட்சம் துன்புறுத்தப்படுவார்கள்.அதிகபட்சமாக ரவுடி என்று முத்திரை குத்தப்பட்டு எண்கவுண்டரில் கூட கொல்லப்படுவார்கள்.இவர்கள் தண்டனை பெரும் வகையில் குற்றங்கள் ஜோடிக்கப்படும்.
காவல்துறை ரெக்கார்டுகளில் தேடினாலும் சரி,அரசு புள்ளி விபரங்களிலும் சரி,பெரும்பாலும் குற்றவாளிகள் அடித்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.காரணம் என்ன?இவர்கள் தான் மென்மையான இலக்குகள்!இல்லாதவர்கள் என்றால் எல்லாவகையிலும் இவர்கள் இல்லாதவர்கள்!பணக்காரர்கள்,அதிகாரவர்க்கத்தினர் அல்லது சமூகத்தில் பெரிய இடங்கள் எனக் கூறப்படுபவர்களை எல்லாம் குற்றத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இந்த சமூகம் பார்க்க பழகிகொண்டிருக்கிறது.
போலிஸ் ரெகார்டுகள் அல்லது அரசு புள்ளிவிபரங்கள் சொல்வதெல்லாம் உண்மையா?உண்மையில் குற்றவாளிகள் குப்பங்களில் இருந்து தான் வருகிறார்களா?உண்மை அதுவல்ல!
ஆதிக்க சக்திகளின் குற்றங்களை போலீசார் தொண்ணூறு சதவிகிதம்பதிவு செய்வதில்லை.அப்படியே பதிவு செய்யப்பட்டாலும் அந்த வழக்குகள் கோர்ட் படி ஏறாது.அப்படியே கோர்ட் படி ஏறினாலும் பெரும்பாலும் குற்றங்கள் நிரூபிக்கப்படுவதில்லை.அப்படியே குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலும் அவர்கள் தண்டனை பெறுவது சந்தேகம்.அப்படியே தண்டனை பெற்றாலும் அவை ஒன்றும் குப்பத்து திருடனுக்கு வழங்கப்பட்ட அளவு கூட இருக்காது.மொத்தத்தில் அரசு இயந்திரங்கள் ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக இருக்கும்.மீண்டும் போலீசார் குற்றவாளிகளை தேடி குப்பத்தை நோக்கி செல்வார்கள்!
‘பெட்டி’ திருடனிடம் காட்டும் அதிகாரத்தை இவர்கள் கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கும் அதிகார, ஆதிக்க சக்திகளிடம் காட்டமாட்டார்கள்.தினந்தோறும் கோடிக்கணக்கில் வரி எய்ப்பு நடக்கிறது;கோடிக்கணக்கில் ஊழல் நடக்கிறது;கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு மோசடி நடக்கிறது.இவர்கள் செய்யும் கொலை,கற்பழிப்பு சம்பவங்களுக்கும் பஞ்சமிருக்காது!ஆனால் என்றாவதுதான் ஒரு வழக்கை பதிவு செய்வார்கள்;அது அன்றே நமது ஞாபக மறதியில் கரைந்து போகும்!
ஆதிக்க சக்திகள் செய்யும் குற்றங்கள் நம் கண்முன்னே தினந்தோறும் ஆயிரக்கணக்கில் நடக்கிறது.ஆனாலும் நாம் விலகிச் செல்கிறோம்.நம் ஞாபக மறதி ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாகவே இருக்கிறது. குப்பத்து மனிதனை குற்றவாளியாக்க நம் மனது பழகி கொண்டுவிட்டது.!
ஒவ்வொரு தமிழருக்கும் உள்ள கடன் எவ்வளவு?
தமிழக சட்டசபையில் நடந்த பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து நிதியமைச்சர் அன்பழகன் பேசியதாவது:
தமிழக சட்டசபையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் நேற்று முடிந்தது. அதற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:
தனிநபர் கடனை பொறுத்தவரை, மராட்டியத்தில் ஒரு நபருக்கு ரூ.18,575 ம், ஆந்திரத்தில் அது ரூ.16,494 ஆகவும், கர்நாடகத்தில் ரூ.15,103 ஆகவும், கேரளத்தில் ரூ.23,991 ஆகவும் உள்ளது. தமிழகத்திலோ அது ரூ.14 ஆயிரத்து 353 ஆக உள்ளது. இந்தியாவின் மொத்த கடன் பொறுப்பு ரூ.35 லட்சத்து 15,606 கோடியாகும்.
தனி நபர் கடனை பொறுத்தவரை இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 34,231 ரூபாய் கடன் உள்ளது. தமிழகத்தில் தனி நபர் கடன் பொறுப்பு மிகவும் குறைவாக இருப்பதை தெரிந்து கொள்ளலாம். ஆகவே தமிழகம் கடன் நிலைமையில் மோசமாக இல்லை. இது தீர்க்க முடியாத கடனும் அல்ல. கடனை திருப்பிச் செலுத்தும் தகுதி இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.
இது எந்த ஊரு நியாயமுங்க?
சட்டத்திற்கு புறம்பாக நிலம் அபகரித்தது தொடர்பாக நீதிபதி தினகரன் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்து,அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது தொடர்பாக ஆரம்பகட்ட வேலைகள் இராஜ்ய சபாவில் ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் கர்நாடகாவில் வக்கீல்களால் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட போராட்டங்களினாலும்,ஊடகங்களின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாகவும் உச்ச நீதிமன்றம், நீதிபதி தினகரனை கட்டாய விடுப்பில் போகச்சொல்லியது.இருந்தும், அவர் கட்டாய விடுப்பில் போக மறுத்ததன் விளைவாக அவரை சிக்கிம் ஐகோர்ட்டுக்கு தலைமை நீதிபதியாக மாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் முடிவு செய்திருப்பதாக ஊடகங்கள் மூலம் செய்திகள் வெளியாயின.
கர்நாடகா ஐகோர்ட்டுக்கு தகுதியில்லையாம்!ஆனால் சிக்கிம் ஐகோர்ட்டுக்கு தகுதியானவராம்!இது எந்த ஊரு நியாயமுங்க?
சிக்கிம் மாநில பார் கவுன்சில் வக்கீல்களும் போராட்டத்தில் குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.அவர்கள் உச்ச நீதிமன்றம் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்கள்.தங்களுடைய எதிர்ப்பையும் மீறி உச்ச நீதிமன்றம் நீதிபதி தினகரை சிக்கிமிர்க்கு இடமாற்றம் செய்தால் அவரது பதவி ஏற்பு விழாவை புறக்கணிக்க போவதாக அம்மாநில வக்கீல்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஏற்கனவே நீதித் துறை, நாட்டின் பல்வேறு மாநிலங்களில், கீழ் கோர்ட் நீதிபதிகள் முதல் ஐகோர்ட் நீதிபதிகள் வரை எழுந்துள்ள ஊழல் குற்றசாட்டுக்களால் தனது பெயரை கெடுத்துக் கொண்டுள்ளது.இந்நிலையில் நீதிபதி தினகரன் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஆடும் கண்ணாம்பூச்சி ஆட்டமானது, அதன் நம்பகத்தன்மையை இன்னும் கேள்விக்குறியதாக்கப்போகிறது!
உலகம் மாவோயிஸ்டுகள் காணும் கனவை விட பெரியது
இது ஒருபுறம் இருக்க, இந்திய மாவோஸ்டுகள் 2050-ஆம் ஆண்டுக்குள் ஆயுதப் புரட்சியின் மூலம் மாவோஸ்ட் கம்யுனிச ஆட்சியை ஆட்சி அமைக்க விரும்புவதாக அறிவித்துள்ளார்கள்!ஆனால் உலகம் மாவோஸ்டுகள் காணும் கனவை விட பெரியது!
காரணம்! உலகம் ஜனநாயகம், மக்களாட்சி தத்துவங்களையே சிறந்ததாக கருதி வாழ பழகிகொண்டுவிட்டது!நேபாளில் கூட மாவோயிஸ்டுகளால் ஜனநாயக பாதையையே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம்!மாவோ சொன்னது போலவோ அல்லது மார்க்ஸ் சொன்னது போலவே ஒரு ஐடியல் கம்யுனிச சமுதாயத்தை அமைக்க முடியாது.உலகில் இதுவரை இருந்த கம்யுனிச அரசுகளும் முழுமையாக அவர்களின் சிந்தாந்தப் படி அமையவும் இல்லை!ரஷ்யா முதற்கொண்டு ஐரோப்பாவிலிருந்த கம்யுனிச நாடுகளினால் கூட கம்யுனிச சித்தாந்தத்தை தொடர முடியாமல் ஜனநாயகப் பாதைக்கு திரும்பிவிட்டார்கள்.கம்யுஸ்ட் ஆட்சி பல நாடுகளில் உருவானாலும் கூட அவற்றின் நிலைத் தன்மை கேள்விக்குறியது.சீனாவில் ஒரு கட்சி கம்யுனிச ஆட்சி இருந்தாலும், அங்கும் சமத்துவம் இல்லை.ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.மனித உரிமை பற்றி அங்கு பேசவே கூடாது.அரசு அதிகாரிகளிடையே ஊழலுக்கும் பஞ்சமில்லை.எனவே கம்யுனிச அரசு என்பது அடிப்படையில் ஒரு கட்சி ஆட்சி என்பதை தவிர நடைமுறையில் மற்ற நாடுகளைப் போல தான். அதுவும் நக்சல்கள் அவர்கள் கூறுவதை போல 2050-இல் ஆயுதப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்தாலும், காலப்போக்கில் ஒன்றும் பெரிய வித்தியாசம் இருக்கப் போவதில்லை!அப்போதும் ஏழைகள் இருப்பார்கள், முதலாளிகள் சுரண்டிக்கொண்டே தான் இருப்பார்கள்! என்ன கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்!.அவ்வளவு தான்!
எங்கெல்லாம் மாவோஸ்டுகள் குறிப்பாக வளர்ந்திருக்கிறார்கள்?.அரசுகளின் மெத்தனப் போக்கினால்,பாராமுகத்தால் எங்கெல்லாம் வறுமை தலைவிரித்தாடுகிறதோ,எங்கெல்லாம் முதலாளிகள்,கந்துவட்டிக்காரர்கள் மற்றும் அரசு அமைப்புகளால் விளிம்பு மனிதர்கள் வஞ்சிக்கப்படுகிறார்களோ அல்லது சுரண்டப் படுகிறார்களோ அங்கெல்லாம் நக்சல்கள் வளர்ந்திருக்கிறார்கள்! அதை அரசுகள் முதல் சமூகவியலாளர்கள் வரை அனைவரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.நக்சலிசம் உருவாக கூறப்படும் அனைத்து காரணங்களும் மறுக்க முடியாதவை.அரசுகள் முதலாளிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதற்காக ஏழைகளை, பழங்குடிகளை காலம் காலமாக வஞ்சித்து வருகிறார்கள் என்பதும் வெட்கப்பட வேண்டியது தான். நக்சல்கள் வளர்ந்த பகுதிகள் காலம் காலமாக வளர்சிப்பனிகளில் இருந்து புறக்கணிக்கபட்டன என்பதும் நூறு சதவிகிதம் மறுக்க முடியாதது தான்!
எத்தனையோ தலைவர்களை நாம் உண்மையான சமூக புரட்சியாளர்களாக நம்பியிருக்கிறோம்.கடைசியில் அவர்களெல்லாம் தங்களது சாதிக்குள் அல்லது சாதி அடையாளத்திற்குள் கரைந்து போயிருக்கிறார்கள் அல்லது சாதி அபிமானிகளால் கரைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது வரலாறு!
பெற்ற மகளையே தந்தை கொல்லும் நிலை இன்னும் தொடரும் பொது என்ன பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்?
கருணாநிதி செய்தது சரியா?தொடர்ந்து ஏமாற்றப்படும் தலித் கிறிஸ்தவர்கள்
தலித் கிறிஸ்தவர்கள் தங்களை தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கவேண்டும் என கடந்த அறுபது ஆண்டுகளாக அரசியல் மற்றும் சட்டபூர்வமான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.தொடர்ச்சியாக அதிகமான ஏமாற்றங்கள்! ஏராளமான வலிகள்! இருந்தும் மனவலிமையுடன் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.408 கோடி ஆகும்.அதாவது மொத்த இந்திய மக்கள் தொகையில் 2.34%.அதில் இந்தியா முழுவதும் 1.6 கோடி தலித் கிறிஸ்தவர்கள் உள்ளனர்.அதாவது ஏறக்குறைய 66% சதவிகிதம் பேர். இந்திய கிறிஸ்தவ மதம் சாதி முறையை போதிப்பதில்லை என்றாலும் நடைமுறையில் ஜாதிய முறைகளையே பின்பற்றுகிறது.இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை என்னவோ, அதே தான் கிறிஸ்துவ மதத்திலும் அவர்கள் நிலை.
வரலாற்று பூர்வமாக, இந்து மதத்தில் உள்ள இழிநிலையில் இருந்து தங்களை காத்துக்கொள்ளவே தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் கிறித்துவத்திற்கும், இஸ்லாம் மதத்திற்கும் மாறினார்கள்.ஆனால் அங்கும் அவர்களின் சமூக,பொருளாதார மற்றும் கல்வி நிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.தீண்டாமை என்ற இழிநிலைக்கு அங்கும் விடுதலை இல்லை.
தலித் சீக்கியர்கள் 1956-ஆம் ஆண்டும், தலித் புத்த மதத்தினர் 1990-ஆண்டும், தாழ்த்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டார்கள். காரணம்! புத்த மதமும், சீக்கிய மதமும் இந்துமதத்தில் இருந்து தோன்றியவை என்பதால் இங்குள்ள தலித்துகளின் கோரிக்கைகள் காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.ஆனால் தலித் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் இதுவரை பாராபட்சம்.காரணம்!கிறிஸ்துவமதம் அடிப்படையில் சாதியம்(வர்ணாசிரம தர்மம்) போதிப்பதில்லை;ஆனால் சமத்துவத்தை வலியுறுத்துகிறது.அடிப்படையில் இதன் தோற்றமும் இந்தியா அல்ல என்பதும் ஒரு காரணம்.
சங்க பரிவாரங்கள் தலித் கிறித்துவர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்ப்பதற்கு காரணம், அது இந்து மதத்திலிருந்து மத மாற்றத்தை இன்னும் வேகப்படுத்தும் என்ற பயமே!
கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள தென்னிந்தியாவிலும், ‘மதசார்பற்றவர்கள்’ என மார்தட்டிக்கொள்ளும் அரசுகள் ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை. ஒரே ஒரு சலுகை, அதாவது கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும்(தலித் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களும் அடக்கம்) பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் நீண்டகாலமாக இணைக்கப்பட்டுள்ளார்கள்.
மத்திய அரசும் இவர்களை 1993-ஆம் ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27% சதவிகித இடஒதுக்கீட்டில் இணைத்துள்ளது.இருந்தும் இதில் யார் அதிகம் பயன்பெறுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.பி.ஜே.பி-யையும், காங்கிரசையும் தவிர மற்ற தேசிய மற்றும் பிராந்திய கட்சிகள் அனைத்தும் தலித் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்பதை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளன.ஆனாலும் அனைத்துக் கட்சிகளும் இதில் வேகம் காட்டவில்லை எனபதும் உண்மை.
கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என முதலமைச்சர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தலித் கிறிஸ்தவர்கள்.தி.மு.க. அரசு கிறிஸ்தவர்களுக்கு 3.5% சதவிகித இடஒதுக்கீடு கொண்டுவந்தபோது கிறிஸ்தவர்களில் உள்ள ஒரு ஆதிக்க பிரிவினர் தாங்கள் ஏற்கனவே 3.5%சதவிகிதத்திற்கும் அதிகமான வாய்ப்புகளைப் பெறுவதால் பிற்படுத்தப்பட்ட பிரிவிலேயே இருக்கிறோம் என கூறிவிட்டனர்.ஆனால் முதலமைச்சர் கருணாநிதி என்ன செய்திருக்கலாம்?அதில் ஒரு இரண்டு சதவிகிதமாவது தலித் கிறிஸ்தவர்களுக்கு ஒதுக்கி இருக்கலாம்.மதரீதியான இடஒதுக்கீடு வழங்குவது என முடிவாகிவிட்ட நிலையில் தாழ்த்தப்பட்டவர்களில் அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு இருப்பதைப்போல தலித் கிறிஸ்துவர்களுக்கு அந்த 3.5% சதவிகிதத்தில் ஒரு இரண்டு சதவிகிதமாவது வழங்கி இருக்கலாம்.இந்தியாவுக்கே ஒரு முன்மாதிரியாக இருந்திருக்கலாம்! ஒரு நல்ல வாய்ப்பை நழுவவிட்டு விட்டார்கள்!
இன்று பிரதமருக்கு கடிதம் எழுதுவதெல்லாம் அவர் செய்திருக்க வேண்டியதைவிட செய்திருக்கும் சிறிய செயலாகவேபடுகிறது!
இலங்கை பொதுத்தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆர் பாடல்களுக்கு முக்கியத்துவம்
பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் செய்தது சரியா?
Indian Institute of Forest Management (IIFM) -ல் நடந்த ஏழாவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் “சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகளுக்கு பின்பும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அணியும் ஆடை விவகாரத்தில் காலனியாதிக்க நடைமுறையை பின்பற்றுவது நாகரிகமற்ற/காட்டுமிராண்டித்தனமான செயல்” என வர்ணித்தார்.
மேலும் தனது பட்டமளிப்பு விழா ஆடையான கவுனை விழா மேடையிலேயே துறந்தார்.அதுமட்டுமல்லாமல், இதுபோன்ற மத்திய கால ஆடை அணியும் நடைமுறையைவிட, ஏன் நிகழ்காலத்திய எளிமையான ஆடையை அணியக்கூடாது? என மாணவர்களிடமிருந்து பலத்த கரவொலிக்கிடையே வினவினார்.
அமைச்சர் ஜெய்ராம் ரமேசின் இந்தச் செயல் அறிவுஜீவிகள் வட்டாரத்தில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தக்கூடும். என்றாலும், அவர் செய்தது சரிதானா? என்ற கேள்வி எழுகிறது.மக்களாட்சி காலத்தில் பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற மேட்டுக்குடித்தனமான நடைமுறைகள் தேவைதானா? என்ற கேள்வி எழுகிறது
அதுவும் இன்று கல்வியானது வணிகப் பொருளாக மாறிவிட்ட இந்தக் காலகட்டத்தில், மேட்டுக்குடித்தனமாக இந்த பட்டமளிப்பு விழா ஆடை அணியும் முறையானது மரியாதையற்ற அநாகரிகமான செயலாகவே படுகிறது. பட்டமளிப்பு விழா என்ற போர்வையில் இந்த தனியார் கல்வி நிறுவனங்கள் செய்யும் கூத்துக்களுக்கு அளவே இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்!
கவர்ச்சிக்காக பிரபலங்கள் போர்வையில் உள்ள அனைவருக்கும் பட்டமளிப்பு விழா ‘கவுன் மற்றும் ரோப்’ போட்டு அழகு பார்க்கிறார்கள்.பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம் வேந்தர்களாகவும் அவரது மகன்கள் இணை வேந்தர்களாகவும்(பிரிட்டிஷ் கால பிரபுக்கள் போல்) அந்த பட்டமளிப்பு விழா கவுனைப் போட்டுக்கொண்டு விழாவுக்கு வருவது கண்களை கூசச் செய்கிறது.
ஏழைகள் வயிர் எறிந்தால் ஐயோ எனப் போவார்கள் !
அரசுகளால் முதலாளிகளை பொருளாதார சிக்கலிலிருந்து மீட்க முடிகிறது.ஆனால் கோடிக்கணக்கான ஏழைகளைப் பாதிக்கும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தை குறைக்க வழி தெரியவில்லை.கொழுத்துப் போகும் முதலாளிகளுக்கு அரசுகள் என்றும் துணையாக இருக்கும்!காரணம் அவர்களிடம் ஓட்டுக்கள் இல்லை!ஆனால் ஓட்டை விலைகொடுத்து வாங்க பணம் இருக்கிறது!
ஏழைகள் வயிறெரிந்தால் ஒரு நாள் ஐயோ எனப் போவார்கள்!
அண்மைய மறுமொழிகள்