தந்தை தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்;ஆனால் மகன் ஐ.ஏ.எஸ் ஆனார்

எட்டு வருடங்களுக்கு முன்பு தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுக்க மறுத்த ஒரே காரணத்திற்காக  குலாம் ரசூல் ஷா காஷ்மீர்  தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்.ஆனால் இன்று அவரது மகன் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி.அதுவும் இந்த ஆண்டு வெளியான ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் தேர்வு முடிவுகளில் இவர் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஒருவர்  ஐ.ஏ.எஸ் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெறுவது இதுவே முதல் முறை.இத்துணைக்கும் இவரது பூர்வீகம் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வார  மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம்.

ஷா பைசல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஷெர்-இ-மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றவர்.தேர்வு முடிவு தெரிந்த மகிழ்ச்சியில் தன்னால் பேச இயலவில்லை என தெரிவித்த ஷா பைசல் “என்னுடைய தந்தை தீவிரவாதிகளால் கொள்ளப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்ததை என் கண்ணால் பார்த்திருக்கிறேன்.என்னுடைய வாழ்க்கையே முற்றிலும் இழந்தது போல உணர்ந்தேன்.எனக்கு கணிதம் மற்று ஆங்கிலம் சொல்லிக் கொடுத்த அவர் இந்த மகிழ்ச்சியில் பங்குகொள்ள இங்கு இல்லை” என கூறினார்.இதில் இன்னுமொரு சிறப்பு இவர் எந்த கோச்சிங் சென்டரிலும் படிக்காமல் தன் சுய முயற்சியுடன் படித்தவர் என்பது.

நம்ம தமிழக மாணவர்கள்  இந்த ஆண்டும் எப்போதும் போல ஐ.ஏ.எஸ் தேர்வில் கலக்கி இருக்கிறார்கள்.தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் கோச்சிங் நிறுவனங்கள் போட்டியின் காரணமாக ஆளுக்கொரு புள்ளி விபரங்களை கொடுத்தாலும், தமிழகத்தில் இருந்து  நூற்றுக்கும் மேற்பட்டோர் தேர்வு பெற்றிருப்பது உண்மை.

குற்றவாளிகள் ஏன் பெரும்பாலும் அடித்தட்டு வர்க்கத்தில் இருந்தே வருகிறார்கள்?

சிறிய குற்றமோ அல்லது பெரிய குற்றமோ;அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி இல்லை இந்தியாவாக இருந்தாலும் சரி; குற்றவாளிகளை தேடும் பணி முதலில் ஆரம்பிப்பது அடித்தட்டு மக்கள் வாழும் பகுதிகளில் தான்.அமெரிக்காவாக இருந்தால் கருப்பர்கள் வாழும் பகுதிகளில் குற்றவாளிகளை தேடுவார்கள்.இந்தியாவாக இருந்தால் எங்காவது குப்பத்தில் தேடுவார்கள்.

ஏன்?குற்றவாளிகள் குப்பத்தில் தான் இருக்க வேண்டுமா?ஆமாம் போலிசின் உளவியல் அப்படித்தான் சொல்கிறது.

அதுபோல,இவர்கள் செய்யும் சிறு சிறு குற்றங்களுக்கும் கூட தண்டனை எப்படி இருக்கும் என சொல்லித்தெரிய வேண்டியதில்லை.சிறு திருட்டாக இருந்தாலும் சரி, அல்லது கொலைகுற்றமாக இருந்தாலும் சரி, அவர்கள் உடல் மற்றும் மன ரீதியாக உச்ச பட்சம் துன்புறுத்தப்படுவார்கள்.அதிகபட்சமாக ரவுடி என்று முத்திரை குத்தப்பட்டு எண்கவுண்டரில்  கூட கொல்லப்படுவார்கள்.இவர்கள் தண்டனை பெரும் வகையில் குற்றங்கள் ஜோடிக்கப்படும்.

காவல்துறை ரெக்கார்டுகளில் தேடினாலும் சரி,அரசு புள்ளி விபரங்களிலும் சரி,பெரும்பாலும் குற்றவாளிகள் அடித்தட்டு வர்க்கத்தை  சேர்ந்தவர்களாகத்தான்  இருப்பார்கள்.காரணம் என்ன?இவர்கள் தான் மென்மையான இலக்குகள்!இல்லாதவர்கள் என்றால் எல்லாவகையிலும் இவர்கள் இல்லாதவர்கள்!பணக்காரர்கள்,அதிகாரவர்க்கத்தினர் அல்லது சமூகத்தில் பெரிய இடங்கள் எனக் கூறப்படுபவர்களை எல்லாம் குற்றத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இந்த சமூகம் பார்க்க பழகிகொண்டிருக்கிறது.

போலிஸ் ரெகார்டுகள் அல்லது அரசு புள்ளிவிபரங்கள் சொல்வதெல்லாம் உண்மையா?உண்மையில் குற்றவாளிகள் குப்பங்களில் இருந்து தான் வருகிறார்களா?உண்மை அதுவல்ல!

 ஆதிக்க சக்திகளின் குற்றங்களை போலீசார் தொண்ணூறு சதவிகிதம்பதிவு செய்வதில்லை.அப்படியே பதிவு செய்யப்பட்டாலும் அந்த வழக்குகள் கோர்ட் படி ஏறாது.அப்படியே கோர்ட் படி ஏறினாலும் பெரும்பாலும் குற்றங்கள் நிரூபிக்கப்படுவதில்லை.அப்படியே குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலும் அவர்கள் தண்டனை பெறுவது சந்தேகம்.அப்படியே தண்டனை பெற்றாலும் அவை ஒன்றும் குப்பத்து திருடனுக்கு வழங்கப்பட்ட அளவு கூட இருக்காது.மொத்தத்தில் அரசு இயந்திரங்கள் ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக இருக்கும்.மீண்டும் போலீசார் குற்றவாளிகளை தேடி குப்பத்தை நோக்கி செல்வார்கள்!

‘பெட்டி’ திருடனிடம் காட்டும் அதிகாரத்தை இவர்கள் கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கும் அதிகார, ஆதிக்க சக்திகளிடம் காட்டமாட்டார்கள்.தினந்தோறும் கோடிக்கணக்கில் வரி எய்ப்பு நடக்கிறது;கோடிக்கணக்கில் ஊழல் நடக்கிறது;கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு மோசடி நடக்கிறது.இவர்கள் செய்யும் கொலை,கற்பழிப்பு சம்பவங்களுக்கும் பஞ்சமிருக்காது!ஆனால் என்றாவதுதான்  ஒரு வழக்கை  பதிவு செய்வார்கள்;அது அன்றே  நமது ஞாபக மறதியில் கரைந்து போகும்!

ஆதிக்க சக்திகள் செய்யும் குற்றங்கள் நம் கண்முன்னே தினந்தோறும் ஆயிரக்கணக்கில் நடக்கிறது.ஆனாலும் நாம் விலகிச் செல்கிறோம்.நம் ஞாபக மறதி ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாகவே இருக்கிறது.  குப்பத்து மனிதனை குற்றவாளியாக்க நம் மனது பழகி கொண்டுவிட்டது.!

Categories: சமூகம்

ஒவ்வொரு தமிழருக்கும் உள்ள கடன் எவ்வளவு?

தமிழக சட்டசபையில் நடந்த பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து  நிதியமைச்சர் அன்பழகன் பேசியதாவது:

தமிழக சட்டசபையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் நேற்று முடிந்தது. அதற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:

தனிநபர் கடனை பொறுத்தவரை, மராட்டியத்தில் ஒரு நபருக்கு ரூ.18,575 ம், ஆந்திரத்தில் அது ரூ.16,494 ஆகவும், கர்நாடகத்தில் ரூ.15,103 ஆகவும், கேரளத்தில் ரூ.23,991 ஆகவும் உள்ளது. தமிழகத்திலோ அது ரூ.14 ஆயிரத்து 353 ஆக உள்ளது. இந்தியாவின் மொத்த கடன் பொறுப்பு ரூ.35 லட்சத்து 15,606 கோடியாகும்.

தனி நபர் கடனை பொறுத்தவரை இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 34,231 ரூபாய் கடன் உள்ளது. தமிழகத்தில் தனி நபர் கடன் பொறுப்பு மிகவும் குறைவாக இருப்பதை தெரிந்து கொள்ளலாம். ஆகவே தமிழகம் கடன் நிலைமையில் மோசமாக இல்லை. இது தீர்க்க முடியாத கடனும் அல்ல. கடனை திருப்பிச் செலுத்தும் தகுதி இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.

இது எந்த ஊரு நியாயமுங்க?

சட்டத்திற்கு புறம்பாக நிலம் அபகரித்தது தொடர்பாக நீதிபதி தினகரன் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்து,அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது தொடர்பாக ஆரம்பகட்ட வேலைகள் இராஜ்ய சபாவில் ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் கர்நாடகாவில் வக்கீல்களால் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட போராட்டங்களினாலும்,ஊடகங்களின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாகவும் உச்ச நீதிமன்றம், நீதிபதி தினகரனை கட்டாய விடுப்பில் போகச்சொல்லியது.இருந்தும், அவர் கட்டாய விடுப்பில் போக மறுத்ததன் விளைவாக அவரை சிக்கிம் ஐகோர்ட்டுக்கு தலைமை நீதிபதியாக மாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் முடிவு செய்திருப்பதாக ஊடகங்கள் மூலம் செய்திகள் வெளியாயின.

கர்நாடகா ஐகோர்ட்டுக்கு தகுதியில்லையாம்!ஆனால் சிக்கிம் ஐகோர்ட்டுக்கு தகுதியானவராம்!இது எந்த ஊரு நியாயமுங்க?

சிக்கிம் மாநில பார் கவுன்சில் வக்கீல்களும் போராட்டத்தில் குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.அவர்கள் உச்ச நீதிமன்றம் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்கள்.தங்களுடைய எதிர்ப்பையும் மீறி உச்ச நீதிமன்றம் நீதிபதி தினகரை சிக்கிமிர்க்கு இடமாற்றம் செய்தால் அவரது பதவி ஏற்பு விழாவை புறக்கணிக்க போவதாக அம்மாநில வக்கீல்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஏற்கனவே  நீதித் துறை, நாட்டின் பல்வேறு மாநிலங்களில், கீழ் கோர்ட் நீதிபதிகள் முதல் ஐகோர்ட் நீதிபதிகள் வரை எழுந்துள்ள ஊழல் குற்றசாட்டுக்களால் தனது பெயரை கெடுத்துக் கொண்டுள்ளது.இந்நிலையில் நீதிபதி தினகரன் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஆடும் கண்ணாம்பூச்சி ஆட்டமானது,  அதன் நம்பகத்தன்மையை  இன்னும் கேள்விக்குறியதாக்கப்போகிறது!

Categories: செய்திகள் குறிச்சொற்கள்:

உலகம் மாவோயிஸ்டுகள் காணும் கனவை விட பெரியது

சத்திஸ்கார் மாநிலத்தின் தண்டேவாடா பகுதியில் எழுபத்தைந்து CRPF போலீசார் நக்சலைட்டுகளால் படுகொலை செய்யப்பட்டது, இந்தியா முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.நக்சல்களுக்கும்,பாதுகாப்பு போலீசாருக்கும் இடையே நடக்கும் சண்டையில் இரு தரப்பிலும் ஆட்கள் கொல்லப்படுவது அவ்வப்போது நடப்பது தான் என்றாலும், சமீபத்தில் கொல்லப்பட்ட போலிசாரின் எண்ணிக்கை அனைவரையும் உறையவைத்தது.அரசுத் தரப்பிலிருந்து பதிலடி கொடுக்க, பிரதமர்,உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புதுறை  வல்லுனர்களுக்குள் பலத்த விவாதம் நடந்துகொண்டிருக்கிறது.அதாவது இப்போதைய அரசின் வியூகம் பதிலடி கொடுப்பது என்பதையும்  விட,  நக்சல்களை மூன்று நான்கு வருடத்திற்குள் முற்றிலுமாக ஒழித்து விடுவது என்பதாக இருக்கிறது.உள்துறை அமைச்சர் சிதம்பரமும் இதனை நக்சல்களுக்கு எதிரான போர் என அறிவித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, இந்திய மாவோஸ்டுகள் 2050-ஆம் ஆண்டுக்குள் ஆயுதப் புரட்சியின் மூலம் மாவோஸ்ட் கம்யுனிச ஆட்சியை ஆட்சி அமைக்க விரும்புவதாக அறிவித்துள்ளார்கள்!ஆனால் உலகம் மாவோஸ்டுகள் காணும் கனவை விட பெரியது!

காரணம்! உலகம் ஜனநாயகம், மக்களாட்சி தத்துவங்களையே சிறந்ததாக கருதி வாழ பழகிகொண்டுவிட்டது!நேபாளில் கூட மாவோயிஸ்டுகளால் ஜனநாயக பாதையையே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம்!மாவோ சொன்னது போலவோ அல்லது மார்க்ஸ் சொன்னது போலவே ஒரு ஐடியல் கம்யுனிச சமுதாயத்தை அமைக்க முடியாது.உலகில் இதுவரை இருந்த கம்யுனிச அரசுகளும் முழுமையாக அவர்களின்  சிந்தாந்தப் படி அமையவும் இல்லை!ரஷ்யா முதற்கொண்டு ஐரோப்பாவிலிருந்த கம்யுனிச நாடுகளினால் கூட கம்யுனிச சித்தாந்தத்தை தொடர முடியாமல் ஜனநாயகப் பாதைக்கு திரும்பிவிட்டார்கள்.கம்யுஸ்ட் ஆட்சி பல நாடுகளில் உருவானாலும் கூட அவற்றின் நிலைத் தன்மை கேள்விக்குறியது.சீனாவில் ஒரு கட்சி கம்யுனிச ஆட்சி இருந்தாலும், அங்கும் சமத்துவம் இல்லை.ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.மனித உரிமை பற்றி அங்கு பேசவே கூடாது.அரசு அதிகாரிகளிடையே ஊழலுக்கும் பஞ்சமில்லை.எனவே கம்யுனிச அரசு என்பது அடிப்படையில் ஒரு கட்சி ஆட்சி என்பதை  தவிர நடைமுறையில் மற்ற நாடுகளைப் போல தான். அதுவும் நக்சல்கள் அவர்கள் கூறுவதை போல 2050-இல் ஆயுதப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்தாலும், காலப்போக்கில் ஒன்றும் பெரிய வித்தியாசம் இருக்கப் போவதில்லை!அப்போதும் ஏழைகள் இருப்பார்கள், முதலாளிகள் சுரண்டிக்கொண்டே தான் இருப்பார்கள்! என்ன கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்!.அவ்வளவு தான்!

நக்சல்களின் பெரிய பலம்! நக்சல்கள் பிரச்சினை என்று வரும்போது மக்களுக்கு உருவாகும், அவர்கள் செய்வது சரியா? தவறா? என்ற குழப்பமான மனநிலை!பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக எழும் ஒருமித்த கருத்து அல்லது ஆவேசம்  இந்தியாவில் நக்சல்களுக்கு எதிராக எழுவதில்லை!காரணம்!அவர்கள் தங்களை யாருடைய பிரதிநிதிகளாக காட்டுகிறார்களோ அந்த மக்களின் உண்மை நிலை நம்மை சுடுகிறது!நமக்கு குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது!

எங்கெல்லாம் மாவோஸ்டுகள் குறிப்பாக வளர்ந்திருக்கிறார்கள்?.அரசுகளின் மெத்தனப் போக்கினால்,பாராமுகத்தால் எங்கெல்லாம் வறுமை தலைவிரித்தாடுகிறதோ,எங்கெல்லாம் முதலாளிகள்,கந்துவட்டிக்காரர்கள்  மற்றும் அரசு அமைப்புகளால் விளிம்பு மனிதர்கள் வஞ்சிக்கப்படுகிறார்களோ அல்லது சுரண்டப் படுகிறார்களோ அங்கெல்லாம் நக்சல்கள் வளர்ந்திருக்கிறார்கள்! அதை அரசுகள் முதல் சமூகவியலாளர்கள் வரை அனைவரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.நக்சலிசம் உருவாக கூறப்படும் அனைத்து காரணங்களும் மறுக்க முடியாதவை.அரசுகள் முதலாளிகளுக்கு  முன்னுரிமை கொடுப்பதற்காக ஏழைகளை, பழங்குடிகளை காலம் காலமாக வஞ்சித்து வருகிறார்கள் என்பதும் வெட்கப்பட வேண்டியது  தான். நக்சல்கள் வளர்ந்த பகுதிகள் காலம் காலமாக வளர்சிப்பனிகளில் இருந்து புறக்கணிக்கபட்டன என்பதும் நூறு சதவிகிதம் மறுக்க முடியாதது தான்! 

நக்சல்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்!இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவை, அடிப்படையில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்டவை! என்ன!நக்சல்கள் ஆயுதப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள்.அவர்கள் ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் வளரும் போது கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன்  காப்பாற்ற முடியவில்லை.காரணம் நடைமுறை அரசியல் கொஞ்சம் கடினமானது!கடைசியில் நம்மால் அடித்தட்டு வர்க்கத்திலிருந்து சில முதலாளிகளை உருவாக முடிந்ததே தவிர ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள்!இதில் உங்களுக்கும் விதிவிலக்கிருக்கப் போவதில்லை!ஆனால் ஜனநாயகத்தில் ஒருவரால்  வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கவும் முடியும்.இல்லை என்றால் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவாவது முடியும்!

எத்தனையோ தலைவர்களை நாம் உண்மையான சமூக புரட்சியாளர்களாக நம்பியிருக்கிறோம்.கடைசியில் அவர்களெல்லாம் தங்களது சாதிக்குள் அல்லது சாதி அடையாளத்திற்குள் கரைந்து போயிருக்கிறார்கள் அல்லது சாதி அபிமானிகளால் கரைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது வரலாறு!

அதிலும் இந்திய சமுதாயம் ஐரோப்பிய சமுதாயம் போல ஏழை, பணக்காரன் என்ற கட்டமைப்பை கொண்டதல்ல;இது சாதிய வலைப்பின்னலாளான  முரண்பாடுகளின் மொத்த உருவம்.இதில் சோதனை முயற்ச்சிகள் வேதனையைத் தான் தரும்.
 
எனவே! நக்சல்கள் ஆயுதப் புரட்சியைக் கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்புவதே நல்லது!
படைவீரர்கள் கொல்லப்பட்டாலோ அல்லது காயம்பட்டாலோ அவர்கள் குடும்பத்தினை பாதுகாக்க அரசு இருக்கிறது.ஆனால் நக்சல்களின்  வன்செயல்களுக்கு பதிலடி கொடுக்க பொலிசாரால் துன்புறுத்தப்படும் அல்லது கொல்லப்படும் உறவினர்களுக்கு அல்லது ஆதரவாளர்களை பொருளாதார ரீதியாக பாதுகாக்க யார் இருக்கிறார்கள்?
Categories: சிந்தனை

பெற்ற மகளையே தந்தை கொல்லும் நிலை இன்னும் தொடரும் பொது என்ன பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்?

அவரை பார்த்தால் இவரா இவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்தி வெற்றிகண்டார்! என  ஆச்சரியம் வரும்.பதினெட்டு வருடங்களுக்கு முன்பு கணவனை இழந்தவர்.தனது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன்(மனோஜ்)  தனது கணவரின் சொந்த ஊரான ஹரியானாவில் வாழ்க்கை.
அவரது மகன் மனோஜ் மூன்றாண்டுகளுக்கு முன்பு பக்கத்தில் இருந்த மெக்கானிக் கடையில் வேலை பார்த்தது வரை வாழ்க்கை நன்றாகத்தான் போய்கொண்டிருந்தது.மூன்றாண்டுகளுக்கு முன்னாள் அவரது மகனும்,மருமகளும்(பப்ளி) பெண்ணின் உறவினர்களால் கொடூரமான முறையில் படுகொலைகொல்லப்பட்டார்கள். இதுபோல சாதி விட்டு சாதி காதல் திருமணம் செய்பவர்கள் உள்ளூர் கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பின்படி  கொல்லப்படுவது ஹரியானாவில் ஒன்றும் புதிதல்ல.இதை கௌரவ கொலை(honour killing) என்று குறிப்பிடுகிறார்கள்.அனால் வலிமையான ஆதிக்க சக்திகளால் அமைக்கப்பட்ட கங்காரூ பஞ்சாயத்துக்கள் எனப்படும் உள்ளூர் சாதி பஞ்சாயத்துக்களை எதிர்த்து போராடுவது மிக மிக கடினம்.அதிலும் எழுதப்படிக்கத் தெரியாத,கணவனை இழந்த கொலை செய்யப்பட மனோஜின் தாயார்  சந்திரபதி போன்ற பெண்மணிகள் எதிர்த்து போராடுவதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும்!
அவர் டைம்ஸ் ஆப்  இந்தியா நிருபர் நந்திதா செங்குப்தாவிற்கு அளித்த பேட்டியின் தமிழாக்கம்: 
நிருபர்:இப்போது அமைதிக்கு திரும்பியிருபீர்கள்?உங்களுக்கு நீதி கிடைத்திருப்பதாக நினைக்கிறீர்களா?
சந்திரபதி:நான் நீதித் துரையின் மீது முழுநம்பிக்கை வைத்திருந்தேன்.கோர்ட் இந்த தாயாருக்கும் மதிப்பளித்து நியாயமான தீர்ப்பு வழங்கியுள்ளது.ஆனால் என்னுடைய போராட்டம் இன்னும் ஓயவில்லை.எனது மகனுக்கும், மருமகளுக்கும் பாதுகாப்பு கொடுத்த போலீஸ்காரர்கள் இந்த கொலையாளிகளுக்கு உடந்தையாயிருந்திருக்கிறார்கள்.அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்.அது மட்டுமல்லாமல் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள சாதி பஞ்சாயத்து தலைவர் கங்காராசுக்கு தூக்குத் தண்டனை வழங்கவேண்டும்.அவர்தான் இந்த படுபாதக செயலை தூண்டிவிட்டவர்.  
நிருபர்:திருமணம்   செய்ததிலிருந்து நீங்கள் இதே ஊரில் தான் வசிக்கிறீர்களா?
சந்திரபதி:அமாம்.எனக்கு பதினைந்து வயதில் திருமணம் ஆனபோது இந்த கிராமத்திற்கு வந்தேன்.இடையில்  ஒரு ஐந்து வருடம் மட்டும் எனது கணவர் இராணுவத்தில் வேலை பார்த்ததால்  கான்பூரில் இருந்தோம்.அதற்க்கு பிறகு நான் எனது குடும்பத்தை கவனித்து கொண்டு இதே ஊரில் தான் வாழ்ந்து வருகிறேன்.
 நிருபர்: நீங்களும் அந்த சமூகத்தின் ஒரு அங்கம் தான்.அந்த சமூகம் சாதி விட்டு சாதி திருமணம் செய்வது தவறு எனும்போது நீங்கள் மட்டும் ஏன் உங்கள் மகன் திருமணத்தில் மட்டும் வித்தியாசமாக முடிவெடுத்தீர்கள்?
சந்திரபதி:கட்டாய திருமணத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.எனது மகள்கள் விருப்பப்பட்டால்கூட அவர்கள் விருப்பப்பட்டவரை திருமணம் செய்யலாம்.எனவே எனது மகன் விவகாரத்திலும் இது தான்.பப்ளி ஒரு நல்ல பெண்.இதனால் அவர்கள் ஊரை விட்டு ஓடிப்போகும் முடிவு எனக்கு முன்பே தெரியும் என்று அர்த்தம் இல்லை.மனோஜ் அவர்கள் திருமணத்திற்கு   பிறகுதான் எனக்கு செய்து சொன்னான்.எனது ஊரில் இதே போன்ற பல கௌரவகொலைகள் குறித்து கேள்விப்பட்டிருந்த போதும், திருமண ஜோடிகள் இருவரும் கொலை செய்யப்படுவது இது தான் முதல் முறை.நான் படிக்காதவளாக இருந்தாலும் எனது குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்கிறார்கள்.நாங்கள் விவாதிப்போம்.எது சரி, எது தவறு என்று எனக்கு தெரியும்.நீங்கள் தான் காலத்திற்கேற்ப மாறிக்கொள்ள வேண்டும்.  
நிருபர்:உங்களுடைய மகனும் மருமகளும் ஜூன் 2007-ஆம் ஆண்டு படுகொலைகொலை செய்யப்பட்டதிலிருந்து உங்களுக்கு போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்குமே?
சந்திரபதி:கண்டிப்பாக.முதலில் கிராமத்திலிருந்து எங்களை தள்ளி வைத்தார்கள்.எல்லோரும் எங்களை கவனித்து கொண்டிருப்பார்கள்..ஆனால் யாரும் பேச மாட்டார்கள்.எங்களுக்கு இந்த கிராமத்தில் உறவினர்களும் கிடையாது.சில நேரங்களில் ரேசன் வாங்குவதோ, பால் வாங்குவதோ கூட கடினம்.ஊரில் எங்களுக்கு எதிர்ப்பு அதிகம்.போலிஸ் பாதுகாப்பு இல்லாமல் எங்களால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது.நான் எப்.ஐ.ஆர் பைல் பண்ணுவதற்கு இங்கும் அங்கும் அலையவேண்டியிருந்தது.
 
நான் கொலைகாரர்கள் மீது கேஸ் போட்ட பிறகு பஞ்சாயத்திலிருந்து பேச்சுவார்த்தைக்கு வந்தார்கள்.ஒரு கோடி ரூபாய் தருகிறோம் கேஸை வாபஸ் வாங்கு என்றார்கள்.தங்களது நிலத்தை கூட விற்றுவிடுவதாக கூறினார்கள்.எனது இரண்டு பெண்களுக்கும் நிறைய செய்வதாக கூறினார்கள்.அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.மூன்று வருடங்கள் பயத்துடன் காலம் கடத்தி வந்தோம்.அவர்கள் எந்த நேரத்திலும் எதுவும் செய்யலாம்.நாங்கள் அத்துணையும் சந்தித்தோம்.வேறு எந்த வாய்ப்பும் இல்லை.இது இதோடு முடிவதில்லை.சுப்ரீம் கோர்ட் வரை சென்றாலும் நான் விடுவதாக இல்லை.
நிருபர்:இந்த காலகட்டத்தில் உங்களுக்கு என்ன மாதிரியான உதவி கிடைத்தது?
சந்திரபதி:எதுவும் இல்லை.யாரும் எங்களுடன் பேசுவது கூட இல்லை.ஊடகங்கள் தான் எங்களுக்கு உதவி செய்தன.மூன்று வருடங்களுக்கு முன்பு ஊடகங்கள் கொடுத்த அழுத்தத்தின் பெயரிலேயே என்னுடைய ‘கம்ப்லைண்டை’ போலீசார் வாங்கிக்கொண்டார்கள்.சேவை அமைப்புகள் அவ்வப்போது வந்து எங்களை பார்த்து செல்வதுண்டு.
நிருபர்:தங்களுக்கு இதுபோன்று போராட தைரியம்  எங்கிருந்து வந்தது?
சந்திரபதி:தனது மகன் கொலை செய்யப்பட்டதும் தாய் என்ன செய்வாள்?நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும்.எனது மகனும் பப்ளியும் கிராமத்திலிருந்து காணாமல் போனதும், பப்ளி குடும்பத்தினர் என் மீது ‘ஆள் கடத்தல்’ என குற்றம் சுமத்தி  போலீசில் மனு கொடுத்தார்கள்.பஞ்சாத்து கொடுத்த அழுத்தம் காரணமாக் போலீசார் தினந்தோறும் வந்து என்னை விசாரித்தார்கள்.நானும் அவர்களை தேடினேன்.ஒரு மாதத்திற்கு பிறகு எனது மகன் பொன் செய்தான். தானும் அந்தப் பெண்ணும் கிராமத்திற்கு வருவதாகச் சொன்னான்.வரும் போது இருவரின் விருப்பத்தின் பேரிலேயே திருமணம் செய்தது கொண்டதாக எழுதிக்கொடுப்பதாக கூறினான்.அதோடு இந்த வழக்கு முடிந்திருக்கும்.ஆனால் அவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள்.அது தவறு.நான் என்ன செய்ய முடியும்.அழுதேன்.மௌனமாக இருந்தேன்.அப்படியே இருந்தால் என்னுடைய மற்ற குழந்தைகளின் நிலை என்ன?நான் மட்டும் போராடவில்லை என்றால் எங்கள் வாழக்கை இன்னும் மோசமாகி இருக்கும்.எங்களை ஊரை விட்டு விரட்டி இருப்பார்கள்.எனது குடும்பத்தினர் என்னோடு இருந்தார்கள்.கொலைகாரர்களை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும் என முடிவெடுத்தோம்.
நிருபர்:நீங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்தீர்களா?அப்படியானால் என்ன வேண்டிக்கொண்டீர்கள்?
சந்திரபதி:கடவுளிடம் வேண்டாமல் என்ன செய்வது.காளி, ஹனுமான், சிவா என எல்லா தெய்வங்களிடமும் வேண்டிக்கொண்டேன்.எனக்கு சக்தி வேண்டும் என வேண்டிக்கொண்டேன்.அந்த கொலைகாரர்களை தூக்கில் போட வேண்டும்.எனக்கு நீதி வழங்க வேண்டும் என வேண்டிக்கொண்டேன்.
நிருபர்:இந்த தீர்ப்பின் மூலம் உங்கள் கிராமத்தில் மனமாற்றம் உருவாகும் என நினைக்கிறீர்களா?
சந்திரபதி:போராட வேண்டும் என  நினைப்பவர்களுக்கு இது ஒரு படிப்பினை.இது போன்ற கௌரவ கொலைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம்.ஒரு ஆண் தனது மகளையே படுகொலை செய்ய துணியும் சமூகத்தில் என்ன ஒரு பெரிய மாற்றத்தை நாம் எதிர்பார்க்க முடியும்?
Categories: சமூகம்

கருணாநிதி செய்தது சரியா?தொடர்ந்து ஏமாற்றப்படும் தலித் கிறிஸ்தவர்கள்

தலித் கிறிஸ்தவர்கள் தங்களை  தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கவேண்டும் என கடந்த அறுபது ஆண்டுகளாக  அரசியல் மற்றும் சட்டபூர்வமான  போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.தொடர்ச்சியாக அதிகமான ஏமாற்றங்கள்! ஏராளமான வலிகள்!  இருந்தும் மனவலிமையுடன் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.408  கோடி ஆகும்.அதாவது மொத்த இந்திய மக்கள் தொகையில் 2.34%.அதில் இந்தியா முழுவதும் 1.6 கோடி தலித் கிறிஸ்தவர்கள் உள்ளனர்.அதாவது ஏறக்குறைய 66% சதவிகிதம் பேர். இந்திய கிறிஸ்தவ மதம் சாதி முறையை போதிப்பதில்லை  என்றாலும் நடைமுறையில் ஜாதிய முறைகளையே பின்பற்றுகிறது.இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை என்னவோ, அதே தான் கிறிஸ்துவ மதத்திலும் அவர்கள் நிலை.

வரலாற்று பூர்வமாக, இந்து மதத்தில் உள்ள இழிநிலையில் இருந்து தங்களை காத்துக்கொள்ளவே  தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் கிறித்துவத்திற்கும், இஸ்லாம் மதத்திற்கும்  மாறினார்கள்.ஆனால் அங்கும் அவர்களின் சமூக,பொருளாதார மற்றும் கல்வி நிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.தீண்டாமை என்ற இழிநிலைக்கு அங்கும் விடுதலை இல்லை.

தலித் சீக்கியர்கள் 1956-ஆம் ஆண்டும், தலித் புத்த மதத்தினர் 1990-ஆண்டும், தாழ்த்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டார்கள். காரணம்! புத்த மதமும், சீக்கிய மதமும் இந்துமதத்தில் இருந்து தோன்றியவை என்பதால் இங்குள்ள தலித்துகளின் கோரிக்கைகள் காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.ஆனால் தலித் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் இதுவரை பாராபட்சம்.காரணம்!கிறிஸ்துவமதம் அடிப்படையில் சாதியம்(வர்ணாசிரம தர்மம்) போதிப்பதில்லை;ஆனால் சமத்துவத்தை வலியுறுத்துகிறது.அடிப்படையில் இதன் தோற்றமும் இந்தியா அல்ல என்பதும் ஒரு காரணம். 

சங்க பரிவாரங்கள் தலித் கிறித்துவர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்ப்பதற்கு காரணம், அது இந்து மதத்திலிருந்து மத மாற்றத்தை இன்னும் வேகப்படுத்தும் என்ற பயமே!   

கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள தென்னிந்தியாவிலும், ‘மதசார்பற்றவர்கள்’ என மார்தட்டிக்கொள்ளும் அரசுகள் ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை. ஒரே ஒரு சலுகை, அதாவது கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும்(தலித் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களும் அடக்கம்) பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் நீண்டகாலமாக இணைக்கப்பட்டுள்ளார்கள்.

மத்திய அரசும் இவர்களை 1993-ஆம் ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27% சதவிகித இடஒதுக்கீட்டில் இணைத்துள்ளது.இருந்தும் இதில் யார் அதிகம் பயன்பெறுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.பி.ஜே.பி-யையும், காங்கிரசையும் தவிர மற்ற தேசிய மற்றும் பிராந்திய கட்சிகள் அனைத்தும் தலித் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்பதை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளன.ஆனாலும் அனைத்துக் கட்சிகளும் இதில் வேகம் காட்டவில்லை எனபதும் உண்மை.

கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என முதலமைச்சர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தலித் கிறிஸ்தவர்கள்.தி.மு.க. அரசு கிறிஸ்தவர்களுக்கு 3.5% சதவிகித இடஒதுக்கீடு கொண்டுவந்தபோது  கிறிஸ்தவர்களில் உள்ள ஒரு ஆதிக்க பிரிவினர் தாங்கள் ஏற்கனவே 3.5%சதவிகிதத்திற்கும் அதிகமான வாய்ப்புகளைப் பெறுவதால் பிற்படுத்தப்பட்ட பிரிவிலேயே இருக்கிறோம் என கூறிவிட்டனர்.ஆனால் முதலமைச்சர் கருணாநிதி என்ன செய்திருக்கலாம்?அதில் ஒரு இரண்டு சதவிகிதமாவது தலித் கிறிஸ்தவர்களுக்கு ஒதுக்கி இருக்கலாம்.மதரீதியான இடஒதுக்கீடு வழங்குவது என முடிவாகிவிட்ட நிலையில் தாழ்த்தப்பட்டவர்களில் அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு இருப்பதைப்போல தலித் கிறிஸ்துவர்களுக்கு அந்த 3.5% சதவிகிதத்தில் ஒரு இரண்டு சதவிகிதமாவது வழங்கி இருக்கலாம்.இந்தியாவுக்கே ஒரு முன்மாதிரியாக இருந்திருக்கலாம்! ஒரு நல்ல வாய்ப்பை நழுவவிட்டு விட்டார்கள்!

இன்று பிரதமருக்கு கடிதம் எழுதுவதெல்லாம் அவர் செய்திருக்க வேண்டியதைவிட  செய்திருக்கும் சிறிய செயலாகவேபடுகிறது!

Categories: சமூகம் குறிச்சொற்கள்:

இலங்கை பொதுத்தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆர் பாடல்களுக்கு முக்கியத்துவம்

சினிமா பாடல்கள் வலிமையானவை!அதிலும் சில பாடல்கள் காலத்தை  வென்றவை!அவை பல நேரங்களில் (தேர்தல்) களத்தை வெல்வதற்கும் பயன்பட்டிருக்கிறது.பொதுவாக அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒருவிதமான பாடல்களை உருவாக்குவது உண்டு.ஆனால் குறிப்பாக எம்.ஜி.ஆர் பாடல்கள் தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும் அ.தி.மு.க-வின் தேர்தல்  பிரச்சாரத்தில் முக்கிய இடம்பெறும்.காரணம்!அவை எக்காலத்திற்கும் பொருந்தும் அற்புதமான பாடல்கள்.
 
பொதுவாகவே  துடிப்பான எம்.ஜி.ஆர் தத்துவப் பாடல்கள், கேட்கும் யாருக்கும்  ஒரு ஊக்கத்தைக் கொடுக்கும். இன்னும்கூட பல நிறுவனங்கள் இந்தப் பாடல்களின் உரிமையை நல்ல விலை கொடுத்து வாங்கி வைத்துள்ளன.சமீபத்தில் கூட முதலமைச்சர் கருணாநிதிக்கும், எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதாவிற்கும் எம்.ஜி.ஆர் பாடல்கள்  யாரைக் குறிப்பிட்டு பாடப்பட்டது என்ற விவாதம் ஏற்பட்டது.கருணாநிதி எம்.ஜி.ஆர் தன்னை புகழ்ந்து பாடியதாக குறிப்பிட்டார்.ஜெயலலிதாவோ எம்.ஜி.ஆர் கருணாநிதியின் செயல்பாடுகளை விமரிசித்து பாடும் விதத்திலே அந்தப் பாடல்கள் படத்தில் இடம் பெற்றதாக கூறினார்.
 
இது ஒருபுறம் இருக்க  வரவிருக்கும் இலங்கைப் பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் கட்சிகள் வாக்காளர்களைக் கவர எம்.ஜி.ஆரின் துடிப்புமிக்க பாடல்களைத்தான் பயன்படுத்தி வருகின்றனவாம்.குறிப்பாக ‘நான் ஆணையிட்டால், உழைக்கும் கைகளே, நான் உங்கள் வீட்டு பிள்ளை, ஒன்றே குலமென்று பாடுவோம்’ என, எம்.ஜி.ஆரின் சினிமா பாடல்கள் தான், தற்போது இலங்கை தேர்தல் களத்தில் ஒலிக்கிறதாம்.
 
மேலும் அந்நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் அனைத்து எப்.எம்.களிலும் கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரப் பாடல்களாக இந்தப் பாடல்கள் ஒளிபரப்பாகிறதாம்.

பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் செய்தது சரியா?

Indian Institute of Forest Management (IIFM) -ல் நடந்த ஏழாவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் “சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகளுக்கு பின்பும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அணியும் ஆடை விவகாரத்தில்  காலனியாதிக்க நடைமுறையை பின்பற்றுவது நாகரிகமற்ற/காட்டுமிராண்டித்தனமான   செயல்” என வர்ணித்தார்.

மேலும் தனது பட்டமளிப்பு விழா ஆடையான கவுனை விழா மேடையிலேயே துறந்தார்.அதுமட்டுமல்லாமல், இதுபோன்ற மத்திய கால ஆடை  அணியும் நடைமுறையைவிட, ஏன் நிகழ்காலத்திய  எளிமையான ஆடையை அணியக்கூடாது? என மாணவர்களிடமிருந்து பலத்த கரவொலிக்கிடையே வினவினார்.

அமைச்சர் ஜெய்ராம் ரமேசின் இந்தச் செயல் அறிவுஜீவிகள் வட்டாரத்தில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தக்கூடும். என்றாலும், அவர் செய்தது சரிதானா? என்ற கேள்வி எழுகிறது.மக்களாட்சி காலத்தில் பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற மேட்டுக்குடித்தனமான நடைமுறைகள் தேவைதானா? என்ற கேள்வி எழுகிறது

அதுவும் இன்று கல்வியானது வணிகப் பொருளாக மாறிவிட்ட இந்தக் காலகட்டத்தில், மேட்டுக்குடித்தனமாக இந்த பட்டமளிப்பு விழா ஆடை அணியும் முறையானது மரியாதையற்ற அநாகரிகமான செயலாகவே படுகிறது. பட்டமளிப்பு விழா என்ற போர்வையில் இந்த தனியார் கல்வி நிறுவனங்கள் செய்யும் கூத்துக்களுக்கு அளவே இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்!

கவர்ச்சிக்காக பிரபலங்கள் போர்வையில் உள்ள அனைவருக்கும் பட்டமளிப்பு விழா ‘கவுன் மற்றும் ரோப்’ போட்டு அழகு பார்க்கிறார்கள்.பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம் வேந்தர்களாகவும் அவரது மகன்கள் இணை வேந்தர்களாகவும்(பிரிட்டிஷ் கால பிரபுக்கள் போல்) அந்த பட்டமளிப்பு விழா கவுனைப் போட்டுக்கொண்டு விழாவுக்கு  வருவது கண்களை கூசச் செய்கிறது.

பெரிய பெரிய உலக மாநாடுகளிலும், நிர்வாக அமைப்புகளிலும்  காலத்திற்கேற்ற ஆடைகள் அணியும் முறையையே நாம் மேற்கொண்டு வருகிறோம். இன்னும் நமது தேசியத்தலைவர்கள் தங்களுக்கு உகந்த எளிமையான ஆடைகளையே அணிகிறார்கள்.இருந்தும் தங்களை அவர்களால் மக்களிடம் அடையாளப்படுத்திக்கொள்ள முடிகிறது.ஏன் இதே நடைமுறைகளை கல்வி நிர்வாகத்திலும் நாம் பயன்படுக்கூடாது?எதற்கு நாம் காலனியாதிக்க நடைமுறையை பின்பற்றுவதை  பெருமையாக கருதவேண்டும்?
 
 காலத்திற்கு ஏற்ற மாற்றம் தேவை.பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் கட்டாயம்.எனவே அமைச்சர் ஜெயராம் ரமேஷ் புகுத்தியுள்ள மாற்றத்தி வரவேற்ப்போம்! 
Categories: சிந்தனை குறிச்சொற்கள்:

ஏழைகள் வயிர் எறிந்தால் ஐயோ எனப் போவார்கள் !

கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதாரம் மந்தம் என்றார்கள்!இப்போது பொருளாதாரம் மீட்சியடைந்திருப்பதாக கூறுகிறார்கள்.ஆனால் இந்த இரண்டு சூழலிலும் உணவுப்பொருட்களின் விலை மட்டும் ஏழைகளுக்கு எட்டாத உயரத்தில்!ஏழைகளின் நிலை எப்போதும் போல் போராட்டம் தான்!
உணவுப் பொருட்களின் விலைவாசி  20 சதவிகித அளவிற்கு உயர்ந்து தற்போது 16.25 புள்ளிகள் அளவிற்கு குறைத்துள்ளது.நடைமுறையில் எந்த ஒரு பொருளின் விலைவாசியிலும் பெரிய மாற்றங்கள் இல்லை.
இது இன்று நேற்றல்ல;கடந்த சில வருடங்களாகவே நாடு முழுவதும் உணவுப் பொருட்களின் விலைவாசி ஏறுமுகமாகத் தான் உள்ளது. 
விவசாயிகளுக்கு அறுபதாயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தால் ‘குய்யோ முறையோ’ என்று பத்திரிகைகளில் கதறுவார்கள்.அரசுக்கு  பற்றாக்குறை குறித்து அக்கறை இல்லை என்பார்கள்!பல மாதங்களுக்கு தொடர்ச்சியாக தலையங்கங்கள், கட்டுரைகள் தீட்டுவார்கள்.ஆனால் தொழிலதிபர்களுக்கு பல இலட்சம் கோடிகள் அளவுக்கு வரிவிலக்குகள்,பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் குறைந்த விலையில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் என வாரி வழங்கினாலும் போதாது என்பார்கள். இது போக வருமான வரி, சுங்கம் மற்றும் கலால் வரி  ஏய்ப்புகள்     என்ற பெயரில் பல இலட்சம் கோடிகள் மோசடி வேறு.முதலாளி வர்க்கத்திற்கு கடன் கொடுப்பதற்கு அரசுகள் வங்கிகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது.ஏழைகள் என்ன செய்வது?ஏழைகளை வங்கி ஊழியர்கள் எப்படி நடத்துவார்கள் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.கடைசியில் ஒரே வழி இந்தப் பணக்கார ஏழைகளுக்கு கந்து வட்டிக்காரர்கள் என்றுமே மீள முடியாத வட்டிக்குக் கொடுப்பார்கள்! 
ஏழைகளுக்கு கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் ஜவகர் நகர்புற வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் சில பல இலவசத் திட்டங்கள் ! பிறகும் ஏழைகளின் வாழ்வில் எந்த மாறுதலும் இல்லை!இந்த திட்டங்கள் இல்லாமல் இருந்தபோது இருந்த நிலையை விட ஏழைகளின் நிலை இன்னும் மோசமாக உள்ளது.காரணம் விலைவாசி உயர்வு!
அதிலும் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதம் இன்னும் கொடுமையானது!இந்தத் திட்டங்களால் பிற தொழில்களுக்கு செல்லும் தொழிலாளர்களின் கூலி உயர்ந்து கிராமப்புற நடுத்தர குடும்பங்களையும் நடுத்தெருவுக்கு வர வைத்துள்ளது.ஒட்டுமொத்தமாக சராசரி ஏழைகளின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது!இலவசத் திட்டங்களால் ஏழ்மை ஒழிந்து விடாது.அது ஏழைகளை கடைசிவரை அரசுகளை எதிர்நோக்கும் ஏழ்மை நிலையிலேயே வைத்திருக்கும்.

அரசுகளால்  முதலாளிகளை பொருளாதார சிக்கலிலிருந்து மீட்க முடிகிறது.ஆனால் கோடிக்கணக்கான ஏழைகளைப் பாதிக்கும்  உணவுப் பொருட்களின் விலையேற்றத்தை குறைக்க வழி தெரியவில்லை.கொழுத்துப் போகும் முதலாளிகளுக்கு அரசுகள் என்றும் துணையாக இருக்கும்!காரணம் அவர்களிடம் ஓட்டுக்கள் இல்லை!ஆனால் ஓட்டை விலைகொடுத்து வாங்க பணம் இருக்கிறது! 

ஏழைகள் வயிறெரிந்தால் ஒரு நாள் ஐயோ எனப் போவார்கள்!

Categories: சிந்தனை குறிச்சொற்கள்:
Follow

Get every new post delivered to your Inbox.