விமலவன்

சாமானியன்

பிரச்சினை ஒன்று;சமூகப் பார்வைகள் இரண்டு

சாந்தி சவுந்தரராஜன்! நினைவிருக்கிறதா?கத்தார் நாட்டில் 2006-ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800-மீட்டர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று, குற்றச்சாட்டின் பேரில் அவரிடமிருந்து மீண்டும் பதக்கம் பறிக்கப்பட்டது நியாபகம் இருக்கலாம்!

குற்றச்சாட்டு! அனைத்துலக தடகள அமைப்பால் அவர் பெண் இல்லை என அறிவிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதோடல்லாமல், உடனடியாக முதல் விமானத்தில் இந்திய நிர்வாகத்தால் திருப்பி அனுப்பப்பட்டார்.எண்ணி நாற்பத்தி என்டு மணி நேரத்திற்குள் அவரிடமிருந்து பதக்கம் பறிக்கப்பட்டது.அவருடன் எந்த அதிகாரிகளும் துணைக்கு வரவில்லை.இந்திய நிர்வாகத்தால் மிரட்டி அனுப்பப்பட்டார்.அனைத்துலக அளவில் அவமானப்படுத்தப்பட்ட அவர் பிறகு தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார்.

இத்துணைக்கும் சாந்தி கத்தார் ஆசிய விளையாட்டிற்கு முன்பு ஆறு சர்வதேச தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார்.பாலினம் குறித்த பரிசோதனைகளையும் கடந்து வந்தார்.

மற்றொருவர் கெஸ்தெர் செமேன்யா, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த தடகள வீராங்கனை. சமீபத்தில் 800-மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாம்பியனானவர்.இவருக்கும் பாலினம் குறித்த அதே பிரச்சினை.ஆனால் அவரிடமிருந்து பதக்கம் பறிக்கப்படவில்லை.அவருடைய நாடும் அவரை கைவிடவில்லை.ஒட்டுமொத்த தென் ஆப்பிரிக்காவும் அவருக்குப் பின் அணி வகுத்தது.ஜோகன்னஸ்பெர்க்கில் அவருக்கு சிறப்பான வரவேற்ப்பளிக்கப்பட்டது.

அனைத்துலக தடகள அமைப்பு நிறவெறியை கடைபிடிப்பதாக தென் ஆப்பிரிக்காவினர் குற்றம் சாட்டினர்.தென் ஆப்பிரிக்க அரசு ஒரு படி மேலே போய் “கெஸ்தெர் செமேன்யா தடகளப் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டால் மூன்றாம் நாடுகள் போர் தொடுக்கும்” என மிரட்டியது.

ஆனால் நாம் என்ன செய்தோம்?சாந்தி தெரிந்தே எந்த தவறும் செய்யவில்லை.
தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகப் பொருளாதார சூழலில் இருந்து வந்தவர்.பிறந்ததில் இருந்து எந்த ஒரு மரபணு பிரச்சினைகளையும் உணராதவர்.பெண்ணாகவே வளர்ந்தார்.ஆனால் நாம் கைவிட்டு விட்டோம்!

இதுவரையும் அவருடைய பிரச்சினை குறித்து விசாரிக்க எந்த ஒரு வல்லுநர் குழுவும் அமைக்கப்படவில்லை.சாதரண நடைமுறை விசாரணைகள் மட்டுமே நடந்துள்ளது.அது குறித்த முடிவுகளும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.இதுவரையிலும் யாருக்கும்  சாந்தியிடம் என்ன தவறு இருக்கிறது என தெரியாது!

எதோ தமிழ்நாடு அரசு புண்ணியத்தில் அவருக்கு பண பரிசும், வேலையும் கொடுக்கப்பட்டது.

இதில் மேலும் கொடுமை என்னவென்றால், கெஸ்தர் செமேன்யாவிடம் இருந்து பதக்கம் திரும்ப்பப் பெறப்படவில்லை.ஆனால் இந்திய நிர்வாகம் சர்வதேச தடகள சம்மேளத்திடம் எந்த ஒரு எதிர்ப்பையும் முன்வைக்காமல் நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்குள் பதக்கத்தை திருப்பிக்கொடுத்து விட்டது.

அதுமட்டுமல்லாமல் கெஸ்தர் செமேன்யாவின் பாலினம் குறித்த முடிவை நவம்பர் மாதம் அறிவிப்பதாக சர்வதேச சம்மேளனம் அறிவித்திருக்கிறது.ஆனால் சாந்தியின் பிரச்சினையில் முடிவு உடனடியாக அறிவிக்கப்பட்டது.ஏன் இந்த இருவேறு நிலை?

மொத்தத்தில் சாந்திக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது!

நன்றி:டைம்ஸ் ஆப் இந்தியா

16/09/2009 பதிந்தவர் vimalavan | Uncategorized | | No Comments Yet

மாவோயிஸ்ட்டுக்களுக்கு எதிரான போரில் தோற்றுக்கொண்டிருக்கிறோம்:பிரதமர்

“மாவோயிஸ்ட்களின் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது;அதே போல,மாவோயிஸ்டுக்கள் ஏழைகளின் உரிமைகளுக்காக போராடுவதாக கூறுவதால் அவர்களுக்கான ஆதரவும் அதிகரித்துக்கொண்டே வருகிறது;நாம் மாவோயிட் களுக்கு எதிரான போரில் தோற்றுக்கொண்டிருக்கிறோம்” என பிரதமர் மன்மோகன் சிங் இன்று காவல்துறை உயரதிகாரிகளுக்கான மாநாட்டில் தெரிவித்தார்.

மாவோயிஸ்ட்டுக்களின் வன்முறையில் கடந்த இருபது ஆண்டுகளாக 6000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.மாவோயிஸ்ட்கள் மத்திய இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் நடமாடுகிறார்கள்.இன்னும் சொல்லப்போனால் பல இடங்களில் அரசு இயந்திரங்களை அவர்கள் தான் நடத்துகிறார்கள்.இடதுசாரி தீவிரவாதம் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

“மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நமது சிறப்பான நடவடிக்கைகளையும் மீறி, பழங்குடிகள்,கிராமப்புற ஏழைகள்,அறிவுஜீவிகள் மத்தியில் அவர்களுக்கான ஆதரவு பெருகிக்கொண்டே இருக்கிறது.மாவோயிஸ்டுக்களின் வன்முறையும் குறைந்தபாடில்லை.மாவோயிஸ்டுக்கள் மொத்தம் மாவட்டங்களில் செயல்படுகிறார்கள்.குறிப்பாக மத்திய பிரதேசம்,ஆந்திரபிரதேசம்,சத்திஸ்கார்,மேற்கு வங்கம்,ஜார்கண்ட், பிகார் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அவர்களின் செயல்பாடு அதிக அளவில் உள்ளது” என பிரதமர் தெரிவித்தார்.

எனவே மாவோயிஸ்ட் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகளை பிரதமர் கேட்டுக்கொண்டார்.

15/09/2009 பதிந்தவர் vimalavan | அரசியல் மற்றும் சமூகம் | | No Comments Yet

இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை எவ்வளவு?

இந்தியாவில் 1931-ஆம் வருடத்திற்கு பிறகு பிற்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்து எந்த ஒரு கணக்கெடுப்பும் இல்லை.இடையிடையே அவ்வப்போது  இட ஒதுக்கீடு குறித்து பல்வேறு கமிஷன்கள் அமைக்கப்பட்டாலும், பிற்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்து 1931-க்குப் பிறகு சரியான புள்ளிவிபரங்கள் இல்லாததால், ஒவ்வொரு கமிஷன்களும் ஒரு புள்ளி விபரத்தை கொடுத்து வந்துள்ளன.மண்டல் கமிஷன் கூட, 1931-மக்கள் தொகை கணக்கெடுப்பினை பயன்படுத்தி, extrapolation  என்ற  கணிதமுறையைக் கொண்டு இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 52-சதவிகிதம் என அறிக்கை சமர்பித்தது.

சமீபத்தில், பதினான்காவது மக்களவையின் பாராளுமன்ற குழு “பிற்படுத்தப்பட்டோர் குறித்து சரியான புள்ளிவிபரம் இல்லாமல் அரசு எவ்வாறு பிற்படுத்தப்பட்டோர் நல்வாழ்வுக்காக நிதி ஒதுக்கீடு செய்கிறது” என கேள்வி எழுப்பியது.

மத்திய புள்ளிவிபரத்துறை அமைச்சகத்தின் NSSO – சர்வே இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 35 சதவிகிதம் என குறிப்பிட்டுள்ளது.இதற்கிடையில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் குறித்து, மத்திய அரசால் 2002-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வே, இந்தியாவில் கிராமப்புறங்களில் பிற்படுத்தப்பட்டோரின் மக்கள் தொகை 38.5 சதவிகிதம் என தெரிவிக்கிறது.

இந்த புள்ளிவிபரத்தில் தமிழ்நாடு 54.37 சதவிகித பிற்படுத்தப்பட்டோருடன் முன்னிலை வகிக்கிறது.மற்ற மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை வருமாறு: உத்திரப்பிரதேசம்(51.78%), பிகார்(37%),சத்திஸ்கார்(50.37%),குஜராத்(44.83%),ஆந்திரபிரதேசம்(43.41%),இராஜஸ்தான்(46.80%),ஹரியானா(28.18%), பஞ்சாப்(20.60%),மஹாராஷ்டிரா(14.54%).

மொத்தத்தில் பதினைந்து மாநிலங்களில் பெரும்பான்மையாகவும், உத்திரகான்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர் குறைவான எண்ணிக்கையிலும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலே குறிப்பிடப்பட்ட சர்வேயானது கிராமப்புறத்தை மட்டும் கணக்கில் கொண்டதாகும்.கிராமப்புறம் மற்றும் நகர்புறம் இரண்டையும் சேர்த்து மத்திய புள்ளிவிவகாரத்துறை அமைச்சின் கணக்குப்படி இந்தியாவில் பிற்பட்டோரின் எண்ணிக்கை 35% சதவிகிதமாகும்.

இது குறித்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் குழுத் தலைவர் ஹனுமந்தராவ், ‘கிராமப்புறங்களில் பிற்பட்டோரின் எண்ணிக்கை சர்வேயில் குறிப்பிடப்பட்டதை விட அதிகமாக இருக்கக்கூடும்.எனவே பிற்படுத்தப்பட்டோர்  குறித்து சரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வேண்டும்’ என்றார்.

14/09/2009 பதிந்தவர் vimalavan | தகவல் பலகை | | 1 மறுமொழி

நேபாளத்தில் தொடரும் இந்திய பிராமண ஏகாதிபத்தியம்!

நேற்று முன்தினம், நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவிலில் பூஜை செய்யச் சென்ற இந்திய பூசாரிகள் ராகவேந்திரா பாட்டாவும்,கிரிஷ் பாட்டாவும்(இருவரும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள்) , இந்திய பூசாரிகள் Pashupatinath_Overviewஎதிர்ப்பு போராட்டக் குழுவினரால் தாக்கப்பட்டுள்ளனர்.நேற்றைய தினம் அவர்கள் இருவரும் பலத்த பாதுகாப்புக்கிடையில் பசுபதிநாத் கோவிலில் பூஜை செய்துள்ளனர்.இந்தத் தாக்குதலுக்கு நேபாள அரசின் சார்பிலும்,இந்திய அரசின் சார்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பசுபதிநாத் கோவிலில் இந்திய பூசாரிகள் பூஜை செய்யும் வரலாறு குறித்து இருவேறு கருத்துக்கள் நிலவுகிறது.அதாவது, இந்தக் கோவிலில் பூஜை செய்பவர்கள் பொதுவாக தென்னிந்தியாவைச் சேர்ந்த பிராமணர்கள்!இந்த நடைமுறையானது, அப்போது ஒருங்கிணைந்த பாரதம் வேண்டி வலியுறுத்திய ஆதிசங்கரரின் வேண்டுகோளின்படி கி.பி.ஆறாம் நூற்றாண்டில், நேபாள மன்னர் ‘யக்ஷ  மல்லா’வால் ஆரம்பிக்கப்பட்டதாக ஒரு வரலாறு உள்ளது.

மற்றொரு கருத்தானது,  மன்னர் இறந்தால் நேபாளத்தில் ஒருவருடம் துக்கம் கடைபிடிக்கப்படுமாம்!.அவ்வாறு துக்கம் கடைப்பிடிக்கப்படும் போது யாரும் ஒரு வருடத்திற்கு கோவில் பூஜைகளில் ஈடுபட முடியாதாம்.அதனால் அப்போதிருந்த மன்னர் இறந்ததால், நேபாள பூசாரிகள் பூஜையில் ஈடுபட முடியவில்லை.இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க, கோவிலில் பூஜைகளை அந்த ஒருவருட காலத்திற்கு தொடரும் பொருட்டு,இந்திய பூசாரிகள் அங்கு வந்ததாகவும், அதுவே பின்பு நடைமுறையானதாகவும் கூறப்படுகிறது.

பசுபதிநாத் கோவிலில் நெடுங்காலமாக இருந்துவந்த இந்த முறையை மாற்றி, முந்தைய நேபாள மாவோயிஸ்ட் அரசு, மண்ணின் மைந்தர்களை கோவில் பூசாரிகளாக நியமித்தது. இதை எதிர்த்து நேபாள உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இந்திய பூசாரிகளே நீடிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.இருப்பினும் இந்திய பூசாரிகளை மாற்றக்கோரி ஒரு போராட்டக்குழு போராட்டத்தை தொடர்ந்து வருகிறது.இந்தப் போராட்ட குழு தான் இந்திய பூசாரிகள் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக் கூறப்படுகிறது

இப்போது மன்னராட்சியும் இல்லை.அதனால் மன்னர் இறந்தால் ஒரு வருடம் யாரும் கோவில் வழிபாடுகளில் கலந்து கொள்ளக்கூடாது என்ற நடைமுறையை பின்பற்ற வேண்டிய அவசியமும் இப்போது இல்லை.

இந்த நடைமுறையானது, முந்தைய  நேபாள மன்னருக்கும், ஆதி சங்கரருக்கும் இடையிலான புரிந்துணர்வினால் கொண்டுவரப்பட்டது என்றாலும், மன்னராட்சி இல்லாத மக்களாட்சி உள்ள இந்த தலைமுறையில் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை.இந்த நடைமுறையானது சில காரணங்களுக்காக இடையில் கொண்டுவரப்பட்டது.இப்போது மக்கள் மாற்றத்தை விரும்பும் போது அதை ஏன் இந்திய நேபாள அரசுகள் தடுக்க வேண்டும்?

இந்திய பூசாரிகளைப் போல கற்றறிந்த பூசாரிகள் நேபாளத்தில் இருக்கும் போது, ஏன் இந்திய பூசாரிகள் வழிபாட்டு நடைமுறைகளை இன்னும் தொடரவேண்டும்? 

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை விரட்டுவதற்கு நமக்கு எப்படி உரிமை இருந்ததோ, அதேபோல் ஏன் இந்திய பிராமண ஏகாதிபத்தியத்தை நேபாளத்தில் இருந்து விரட்டுவதற்கு நேபாள் மக்களுக்கு உரிமை இல்லை?நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவிலில், நேபாள பூசாரிகள் தான் பூஜை செய்யவேண்டும் என நேபாள மக்களில் ஒரு பிரிவினர் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? 

கேட்டால், இந்திய பிராமண பூசாரிகள் பூஜை செய்வது தான் மரபாம்!இப்படி மரபு மரபு என்று சொல்லியே கோடிக்கணக்கான மக்களை, ஆயிரக்கணக்கான வருடங்கள் அறியாமை இருளில் வைத்தவர்களிடம் மற்றம் வேண்டி நேபாள் மக்கள் போராடுவதால் நியாயம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே இந்திய எதிர்ப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், இந்தியா, நேபாள விவகாரங்களில் தொடர்ந்து தலையிடுவது இந்த எதிர்ப்புணர்வை அதிகரிக்கத் தான் செய்யும்!

06/09/2009 பதிந்தவர் vimalavan | பொதுவானவை | | No Comments Yet

இரு சோதனைகள்;இருவேறு கோணங்கள்

அறிவியல் பற்றி அறிந்துகொள்ள தயங்குபவர்கள் கூட இந்த இரண்டு சோதனைகள் பற்றி அறியாமல் இருக்கமாட்டார்கள்.காரணம்! அவ்வளவு விளம்பரங்கள்,ஊடகச் செய்திகள், விவாதங்கள்  இந்தியாவில் chandrayaan_10NUCமட்டுமல்ல;உலகம் முழுவதிலும். ஒன்று! அணுகுண்டு சோதனை செய்து புவியை அதிர வைத்தது;மற்றொன்று! நிலவுக்கு விண்கலம் அனுப்பி விண்ணுலகையும் மண்ணுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது!

இந்த இரு சோதனை வெற்றிகளாலும் சராசரி இந்தியன் தனது சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக்கொண்டது  உண்மை!அதே நேரம் அண்டைநாடுகளும், மேற்கு நாடுகளும் மண்டை காய்ந்ததும் உண்மை!

இந்நிலையில்  இந்த இரு சோதனைகள் குறித்தும் அறிவியல் மற்றும், அரசியல் வட்டாரத்தில் நடைபெறும் விவாதங்கள், தினந்தோறும் வரும் ஊடகச் செய்திகளால், விஞ்ஞானிகளின் நம்பகத் தன்மை குறித்து சராசரி இந்தியனுக்கு சந்தேகம் வருவது இயல்பு!

போக்ரான்-2  அணுகுண்டு சோதனை முழுமையாக வெற்றிகரமாக அமையவில்லை என அணு விஞ்ஞானி சந்தானம் முதல் சர்ச்சையைக் கிளப்பினார்.அவருக்கு ஆதரவான அணியினர் இதை உண்மை என்று ஒப்புக்கொண்டதோடல்லாமல், இந்தியா மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.ஆனால், அப்துல்கலாம் தலைமையிலான அணியினர் ‘போக்ரான்-2 அணுகுண்டு சோதனை முழுமையான வெற்றி எனவே மீண்டும் அணுகுண்டு சோதனை தேவையில்லை’ எனக் கூறுகின்றனர்.

எது உண்மை என மண்டையை குடைவதற்குள், நிலவை ஆராய அனுப்பப்பட்ட சந்திராயன் விண்கலத்தின் ரேடியோ தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக இஸ்ரோ அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறது.சென்ற மாதம் சந்திராயனில் இருந்த ‘சென்சார்’ செயலிழந்து விட்டதாக கூறினார்கள்.இருந்தும் பிரச்சினை ஒன்றுமில்லை என்றார்கள்.இப்போது நிரந்திரமாக செயலிழந்து போய்விட்டதை சொல்லாமல் சொல்கிறார்கள். இரண்டு ஆண்டுகால பணிக்காக அனுப்பப்பட்ட சந்திராயன் விண்கலம், ஒரு ஆண்டிலேயே 90 முதல் 95 சதவிகித பணிகளை (காதில் பூ?) பூர்த்தி செய்துவிட்டதாம்!

இரண்டு திட்டங்களுக்கும் எவ்வளவு பணம் செலவாகியிருக்கும்?போக்ரான்- 2 திட்டம் பாதுகாப்பு சம்பந்த்தப்பட்டதால் எவ்வளவு செலவானது என மக்களுக்கு தெரியாது.ஆனால் சந்திராயன் திட்டத்திற்கு ஆனா செலவு 3.8 பில்லியன் ரூபாய்கள்!இது இதே திட்டங்களுக்கு அமெரிக்கா,சீனா மற்றும் ஜப்பான் செய்த செலவைவிட பலமடங்கு குறைவு எனக் கூறப்படுகிறது.

நாட்டில் முப்பது கோடிக்கும் மேற்பட்டோர் ஒருவேளை சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவிக்கிறார்கள்,ஆயிரக்கணக்கான விவசாயிகள் வருடந்தோறும் தற்கொலை செய்துகொள்கிறார்கள்,கோடிக்கணக்கான குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் தவிக்கிறார்கள்,கோடிக்கணக்கான பேருக்கு மருத்துவம்,கல்வி,மின்சாரம், குடிநீர் வசதிகள் இல்லை,தாய்-சேய் இறப்பு விகிதங்களை இன்னும்குறைக்க முடியவில்லை,பன்றிக் காய்ச்சல்  போன்று புதிது புதிதாக வரும் நோய்களை தடுக்க முடியாமல் தவிக்கிறோம். இப்படி இருக்கும் ஒரு நாட்டிற்கு இதுபோன்ற செலவீனங்கள் சரிதானா? என சமூக அக்கறைகொண்ட கொண்ட பலரால் வைக்கப்படும் விமர்ச்சனத்திலும் உண்மையில்லாமல் இல்லை!

இன்னொருபுறம் பார்த்தால், இந்த இரண்டு பரிசோதனைகளும், உலக நாடுகளை இந்தியாவை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தன! அணுகுண்டு சோதனைகளை விமர்ச்சனம் செய்திருந்தாலும் கூட, இந்தியாவை தவிர்க்க முடியாத சக்தி என வளர்ச்சியடைந்த நாடுகள் புரிந்துகொண்டன.

அது அமெரிக்காவாக இருந்தாலும்,ரஷியாவாக இருந்தாலும்,ஐரோப்பிய நாடுகளாக இருந்தாலும் அல்லது சீனாவாக இருந்தாலும் சரி அறிவியல் பரிசோதனைகளில் வெற்றி தோல்விகள், குறைபாடுகள் சகஜம் தான்.இது தேவை இல்லாத செலவு என இஸ்ரோ மீது ஒவ்வொரு காலகட்டத்திலும் விமர்ச்சனம் உண்டு.ஆனால் இஸ்ரோ அனுப்பிய செயற்கைக் கோள்களால் சமூக,பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு புரட்சிகள்/மாற்றங்கள்  ஏற்பட்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது!

29/08/2009 பதிந்தவர் vimalavan | அறிவியல் | | No Comments Yet

திருச்சிக்கு வருகிறது புதிய ஐ.ஐ.எம்(IIM)

ஐ.ஐ.எம் எனப்படும் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள்( IIM-Indian Institute of Management)உலகின் தலைசிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகின்றன.இந்த ஐ.ஐ.எம்-கள் ஏற்கனவே இந்தியாவில் அஹ்மதாபாத்,பெங்களூரு,கொல்கத்தா,இந்தூர்,கோழிக்கோடு, மற்றும் லக்னோ என ஆறு உள்ளன.இத்துடன் புதிதாக ஏழு ஐ.ஐ.எம்-கள்  நிறுவப்படும் என்று கடந்த ஆண்டு அரசு அறிவித்தது.திருச்சியையும் சேர்த்து ஏழு ஐ.ஐ.எம்-களை நிறுவுவதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

திருச்சி,ராஞ்சி,ராய்பூர்,ரோக்டாக் ஐ.ஐ.எம்-கள் 2010-11 ஆம் கல்வியாண்டிலும், ராஜஸ்தான்,ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்திரகான்ட் ஐ.ஐ.எம்-கள் 2011-12 ஆம் கல்வி ஆண்டிலும் தங்கள் பணியைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி ஐ.ஐ.எம் தனது பணியை துவக்கும் பட்சத்தில் தமிழக மாணவர்களும், தமிழகத்தில் உள்ள மேலாண்மை கல்வி நிறுவனங்களும்,தொழில் நிறுவனங்களும் பயன் பெரும்.கண்டிப்பாக தமிழகத்தில் மேலாண்மை கல்வியின் தரம் உயரும் வாய்ப்புள்ளது.

காரணம், இந்தியாவில் உள்ள 1400-க்கும் மேற்பட்ட மேலாண்மை கல்வி நிறுவனங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவை தமிழகத்தில் உள்ளன.இந்தியா முழுவதும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மேலாண்மைக் கல்வி ருவன்னக்ளில் இருந்து வெளிவருகிறார்கள்.இதில் ஆயிரக்கணக்கானோர் தமிழக மாணவர்கள்.

இது தவிர ஐ.ஐ.எம்-கள் குறித்து மேலும் சில தகவல்களைத் தெரிந்துகொள்வது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.
இந்தியாவில் ஏற்கனவே ஆறு ஐ.ஐ.எம்-கள் உள்ளன.புதிதாக ஏழு ஐ.ஐ.எம்-கள்  அடுத்த ஆண்டு முதல் தங்களது பணியை துவங்க உள்ளன.ஆக மொத்தம் இந்தியாவில் ஐ.ஐ.எம்-களின் எண்ணிக்கை உயர உள்ளது.

இந்தியாவில் மேலாண்மைக் கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் 1961-ஆம் ஆண்டு அகமதாபாத் ஐ.ஐ.எம் மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது.அதற்க்கு பிறகு மேலும் ஐந்து ஐ.ஐ.எம்-கள் கொல்கத்தா,பெங்களூரு,லக்னோ,இந்தூர் மற்றும் கோழிக்கோடு போன்ற இடங்களில் நிறுவப்பட்டன.

இந்த ஐ.ஐ.எம்-களில் உள்ள சில ஆயிரம் இடங்களுக்கு இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கிறார்கள்.தேர்வானது எழுத்துத் தேர்வு,Group Discussion,நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடைபெறும்.எழுத்துத் தேர்வு CAT (Common Admission Test) எனப்படும்.

இதுபோக GMAT (Global Management Aptitude Test) என்ற தேர்வு எழுதியவர்களும் அடுத்தகட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.இந்தத் தேர்வானது உலகின் சிறந்த மேலாண்மை நிறுவனங்களில் சேர்வதற்கான தகுதித் தேர்வாகும்.ஐ.ஐ.எம்-களும் இந்த மதிப்பெண்களை ஏற்றுக்கொள்கின்றன.

இதுபோக CAT மற்றும் GMAT மதிப்பெண்களை தலைசிறந்த தனியார் மேலாண்மை கல்வி நிறுவனங்களும் தங்களது அனுமதித் தேர்வுக்கு எடுத்துக்கொள்கின்றன.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் தங்களது இளங்கலை கல்லூரிப் படிப்பில் 50 சதவிகித மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.SC/ST பிரிவினர் 45 சதவிகித மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.

CAT தேர்விற்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு 1300 ரூபாயும், SC/ST பிரிவினருக்கு 650 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.இந்த விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்ட AXIS வங்கி கிளைகளில் கிடைக்கும்.

தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கான கல்விக்கட்டணம் ஒவ்வொரு ஐ.ஐ.எம்-க்கும் ஒரு மாதிரி வேறுபடுகிறது.உதாரணமாக ஐ.ஐ.எம் அகமதாபாத் கல்விகட்டனமாக 11 இலட்சம் வசூலிக்கிறது,ஐ.ஐ.எம் பெங்களூரு, கொல்கத்தா போன்றவை 9 இலட்சம் கட்டணமாக வசூலிக்கின்றன.ஐ.ஐ.எம் லக்னோ இதுவரையிலும் 5 இலட்சம் கட்டணமாக வசூலித்து வந்தது, தற்போது இதை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.

இதைப் பற்றி கவலைப்படத்தேவையில்லை.காரணம் பெற்றோரின் வருமானம் ஆறு இலட்சத்திற்கு குறைவாக உள்ள மாணவர்களுக்கு நிதி உதவிக்கான ஏற்பாடுகளை இந்த கல்வி நிறுவனங்கள் ஏற்பாடு செய்கின்றன.அதுமட்டுமல்லாமல் நீங்கள் ஐ.ஐ.எம்-களில் சேர தேர்வுபெறும் பட்சத்தில் வங்கிகள் நிதி உதவி செய்வதில் பிரச்சினை இருக்கப்போவதில்லை.

ஐ.ஐ.எம்-மாணவர்களுக்கு வளாக வேலைவாய்ப்புகளில் எவ்வளவு சம்பளம் தருகிறார்கள் என அனைவருக்கும் தெரியும்.கடந்த சில ஆண்டுகளாக ஐ.ஐ.எம் மாணவர்களுக்கு அதிக பட்ச சம்பளமாக ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாயும் குறைந்த பட்சமாக ஆண்டுக்கு பத்து இலட்சத்திற்கு மேலும் பெரிய பெரிய நிறுவனங்களால்  வழங்கப்பட்டு வந்தது.சென்ற ஆண்டு பொருளாதார மந்தம் காரணமாக சிறிது தொய்வு ஏற்பட்டாலும் இன்னும் ஐ.ஐ.எம் மாணவர்கள் தான் பெரிய நிறுவனங்களின் ‘ஹாட் கேக்’.

திருச்சி ஐ.ஐ.எம்-மை இன்முகத்துடன் வரவேற்போம்!

27/08/2009 பதிந்தவர் vimalavan | கல்வி | | No Comments Yet

நம்புங்கள்!புகை பிடிப்பதில் இந்தியப் பெண்கள் உலக சாதனை படைத்திருக்கிறார்கள்

உலகம் முழுவதும் ‘டோபோக்கோ அட்லஸ்’ என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, உலக அளவில் புகைபிடிப்பதில் இந்தியப் பெண்கள் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்ததாக மூன்றாமிடம் வகிக்கிறார்களாம்.உலகம் முழுவதும் சுமார் 25 கோடிப் பெண்கள் புகை பிடிப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.இதில் அமேரிக்காவில் 2.3 கோடி பெண்களும், சீனாவில் 1.3 கோடி பெண்களும், பாகிஸ்தானைச் சேர்ந்த முப்பது இலட்சம் பெண்களும் அடக்கம்.நார்வே,சுவீடன் மற்றும் நியூசிலாந்து நாடுகளில் பெண்கள் ஆண்களுக்கு சமமான எண்ணிக்கையில் புகைக்கிறார்களாம்.


இந்திய பெண்கள் உலக அளவில் மூன்றாமிடம் வகித்தாலும் இருபது சதவிகிதத்திற்கும் குறைவான இந்தியப் பெண்கள் மட்டுமே புகைப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.புகைபிடிக்காத இந்தியப் பெண்களைக் காட்டிலும் புகை பழக்கம் உள்ள இந்திய பெண்கள் சராசரியாக எட்டு வருடங்களுக்கு முன்பே இறந்து விடுகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.


இந்த புகை பழக்கத்தினால் பெண்களுக்கு கேன்சர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதாக வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.குறிப்பாக பேரு காலத்தில் பல உடல் உபாதைகள் ஏற்படும் என எச்சரிக்கிறார்கள்.


புகை பழக்கத்தினால் உலகம் முழுவதும் சுமார் அறுபது இலட்சம் பேர் இறப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

27/08/2009 பதிந்தவர் vimalavan | தகவல் பலகை | | 1 மறுமொழி

மனதை உறுத்தும் உண்மை!

உண்மை மட்டும் வெல்லும்(Truth alone win) ; அது என்றும் நின்று கொல்லும் என்ற  பகவத் கீதையின் வாசகம் எவ்வளவு உண்மை என்பதை சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.வரலாறுகள் திரித்து எழுதப்படலாம்;அப்படி எழுதப்படுவதில் சில நன்மைகள் இருக்கலாம்;ஆனால் உண்மை நம் மனதை உறுத்திக்கொண்டே இருக்கும்!

முகமது அலி ஜின்னாவை வில்லனாக சித்தரிக்காத இந்திய வரலாற்று நூல்கள் இல்லை.சிறு வயதில் நமக்கு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் சொல்லிக்கொடுத்ததும் அது தான்;  சுய சிந்தனையை பயன்படுத்தும் வளர்ந்த பருவத்தில் நாம் புத்தகங்களில் படித்ததும் அது தான்.அதாவது,முகமது அலி ஜின்னா இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு வித்திட்ட வில்லன்! முகமது அலி ஜின்னா ஒரு மதவாதி!

ஆனால் சித்தாந்த ரீதியாக எதிரணியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி தலைவர்கள் முகமது அலி ஜின்னாவை சமயசார்பற்றவர் என்றும்,அவர் ஒருங்கிணைந்த இந்தியாவையே விரும்பினார் என்றும் சமீபத்தில் கூறியது அனைவரயும் வியப்பில் ஆழ்த்தியது!.ஒருங்கிணைந்த இந்தியா குறித்து மகாத்மா காந்தியும்,ஜின்னாவும் ஒரே கருத்தைக் கொண்டிருந்ததாகவும், ஆனால் ஜவகர்லால் நேருவும், வல்லபாய் படேலும், காங்கிரஸ் கட்சியும் தான் பிரிவினைக்கு காரணம் என ஜஸ்வந்த் சிங் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஆர.எஸ்.எஸ் தலைவர் சுதர்சன் ” ஜின்னா ஒருமுறை பாலகங்காதர திலகருடன் சேர்ந்து பணியாற்றினார்,பின்பு காந்தியடிகளுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினார்,துருக்கி கலிபாவை மீண்டும் அரியணையில் அமர்த்தக் கோரி கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்ட போது கூட துருக்கி கலிபாவை மீண்டும் அரியணையில் அமர்த்துவதால் இந்தியாவுக்கு என்ன பயன்? என ஜின்னா கேள்வி எழுப்பினார்.ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை” என கூறுகிறார்.

சித்தாந்த ரீதியாக எதிர்த்து வந்தாலும், முகமது அலி ஜின்னாவை பற்றிய அத்வானி, ஜஸ்வந்த் சிங் மற்றும் சுதர்சனன் ஆகியோரின் காலம் கடந்த மதிப்பீடுகள் நம்மை போன்றவர்களை ஜின்னாவைப் பற்றி மறு மதிப்பீடு செய்யத் தூண்டுகின்றன!

இன்று சங்கப் பரிவாரங்கள், இந்திய – பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜவகர்லால் நேருவையும் குற்றம் சாட்டுகின்றன.அதை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகெர்ஜி மறுத்து அறிக்கை விடுகிறார்.

இன்னும் ஒன்றும் கூறப்படுகிறது,அதாவது, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை தடுக்க மகாத்மா காந்தி முகமது அலி ஜின்னாவை பிரதமராக்க நினைத்தார் என்றும், அதை தடுக்க ஜவகர்லால் நேரு  பிரிவினையை ஆதரித்ததாகவும் கூறப்படுகிறது.

வரலாறுகளும் முகமது அலி ஜின்னா 1930-களின் இறுதிவரை தனி நாடு கோரிக்கைகளை முன் வைக்கவில்லை என்றே கூறுகின்றன.முஸ்லிம் லீக் கூட 1940-இல் தான் தனி நாடு கோரிக்கையை தனது லாகூர் மாநாட்டில் முன்வைக்கிறது.அப்படி என்றால் அது வரையிலும் ஒருங்கிணைந்த இந்தியா என்ற சிந்தனையில் இருந்தவர்களிடம் மாற்றம் ஏற்படுத்திய நிகழ்வுகள் என்ன?

1940-க்கு முன்பும் பின்பும் இருந்த காங்கிரஸ் மற்றும் ஜன சங்கத் தலைவர்களின் பேச்சுகள், மற்றும் நடவடிக்கைகளை ஆய்வு செய்தால் யார் இதுபோன்ற மாற்றங்களுக்கு காரணம் எனத் தெரியும்.தனி நாடு கேட்பது மட்டுமே தவறாக இருக்க முடியாது.கேட்கத்தூண்டிய நிகழ்வுகள் என்ன என்பதை ஆய்வு செய்து ஒருவரைப் பற்றி விமர்ச்சனம் செய்வதே சரியாக இருக்கும்!

மொத்தத்தில்  இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு வெளிவராத பல காரணங்கள் இருக்கலாம் என நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. வரலாறுகள் வசதிக்காக எழுதப்பட்டாலும், உண்மை என்றும் நின்று கொல்லும் என்றே தோன்றுகிறது!

26/08/2009 பதிந்தவர் vimalavan | பொதுவானவை | | 1 மறுமொழி

இந்தியாவில் சேப்படி திருடர்களுக்கு ஒரு நீதி;ஊழல் பெருச்சாளிகளுக்கு ஒரு நீதி

தில்லியில் நடந்த சிபிஐ மற்றும் மாநில ஊழல் தடுப்புப் பிரிவுகளின் 17-வது கூட்டு மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், “ஊழல் செய்த பெருந்தலைகள் தண்டனையிலிருந்து தப்பிவிடக் கூடாது”  என வலியுறுத்தியுள்ளார்.ஊழலால் ஏற்படும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் பற்றியும் அதில் ஊழல் ஒழிப்புத்துறைகள் ஆக்கப்பூர்வமாக பணியாற்ற வேண்டிய அவசியம் குறித்தும் கூறியுள்ளார்.மேலும் இதில் பேசிய சி.பி.ஐ இயக்குனர் “வலுவற்ற நீதிமன்ற நடைமுறைகளே  ஊழல் அதிகரிப்புக்கு காரணம்” என இதே மாநாட்டில் பேசியுள்ளார்.

ஊழல் ஒழிப்புப் பற்றி ஒரு பிரதமர் பேசுவது இது முதலாவதும் அல்ல அல்லது கடைசியாகவும் இருக்கப்போவதில்லை! இந்தியாவில் ஊழல் ஒழிப்புத்துறைகளின் எண்ணிக்கைக்கும் பஞ்சமில்லை! ஊழல் ஒழிப்பிற்கான சட்டங்களுக்கும் பஞ்சமில்லை!இந்தியாவில் ஊழல் சம்பந்தமாக பதிவாகியுள்ள,நீர்த்துப்போயுள்ள  வழக்குகளுக்கும் பஞ்சமில்லை!ஊழல் சம்பந்தமான ஊடக செய்திகளுக்கும் பஞ்சமில்லை!இருந்தும் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான கோடிகளை ஊழல் முதலைகள் சுருட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

மக்களுக்குத் தெரிந்தவரை, பத்துக்கும் நூறுக்கும் திருடும் சேப்படித் திருடர்களைத் தவிர, பெரிய திருடர்கள்,ஊழல் பெருச்சாளிகள் யாரும் தண்டனை பெற்றதாக வரலாறு இல்லை!ஆனால் ஊழல் மக்களின் கண்ணுக்கு முன்னாலேயே தான் நடக்கிறது!

 மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்!அவர்களுக்கு பழகிவிட்டது!நூற்றி பத்துக் கோடிக்கும் அதிக மக்கள்தொகையுள்ள இந்தியாவில், யாரும் யாருக்கேனும் தங்களது வாழ்நாளில் இலஞ்சம் கொடுக்காமல் வாழக்கையை நிறைவு செய்த வரலாறு இருக்கப்போவதில்லை!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளே தங்களது சொத்து விபரத்தை மக்களுக்கு வெளியிட தயங்கும் சூழ்நிலை தான் இந்தியாவில் நடைமுறையில் உள்ளது.முன்னால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லகோட்டி “இந்தியாவில் உயர்நீதி துறையில் மட்டும் இருபது சதவிகிதம் பேர் ஊழல் பேர்வழிகள்” என்றார்.கீழ் நீதி மன்றங்களை பற்றி சொல்லவே வேண்டாம். காவல் துறை ஆட்சியாளர்களின் ஏவல்துறையாக இருப்பதால் எதிர்கட்சியினர் மீது மட்டுமே அவர்கள் ஊழல் வழக்குப் போடுவார்கள்.சி.பி.ஐ ஆளும்கட்சிக்கு நெருக்கடி கொடுப்பவர்கள் மீது மட்டும் தான் வழக்குப் போடும். மற்ற ஊழல் ஒழிப்புத் துறைகளும் சொல்வதற்கில்லை.’பாடி ஸ்டிராங் ஆனால் பவுண்டேசன் வீக்’ கதை தான்.

ஊழல் செய்வதில் உலக அளவில் இந்தியா 74 – வது இடத்தில் இருப்பதாக டிரான்ஸ்பரன்சி இண்டேர்நேசனல் நிறுவனம் தெரிவிக்கிறது.சுவிஸ் வங்கியில் இருபத்தைந்தாயிரம் கோடிக்கும் அதிகமாக, இந்தியாவில் சம்பாதித்த ஊழல் பணம் இருப்பதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.ஆனால் அதை கொண்டுவருவதில் அரசு தயக்கம் காட்டி வருகிறது.

இன்று இந்தியாவில் எந்தத் துறையிலும் ஊழல் இல்லை என்ற நிலை தான் நிலவுகிறது.என்ன செய்யப் போகிறோம் நாம்?ஒவ்வொரு வருடமும் பிரதம மந்திரிகளின் உளுத்துப்போன ஊழல் ஒழிப்புப் பேச்சுக்களை கேட்டுக்கொண்டு தான் இருக்க வேண்டும்!

ஜவகர்லால் நேரு காலத்தில் ஒரு கோடி ரூபாய் முந்திரா ஊழலுக்கு மொத்த நாடும் அதிர்ச்சி அடைந்தது.ஆனால் இன்று நூறு, இருநூறு, ஆயிரம், பத்தாயிரம் கோடி ஊழல் செய்திகளைக் கேட்டும் யாரும் அதிர்ச்சியடைவதில்லை.காரணம்,அதில் உண்மை இருக்காது என்பதால் அல்ல! ஊழல் நடந்திருக்கும் என்பது மக்களுக்கு நூறு சதவிகிதம் தெரியும்!. ஆனால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒன்றும் நடக்கப் போவதில்லை என்பதால் அதிர்ச்சியடைவதில்லை.

சேப்படித் திருடர்களை கண்டதும் மக்களுக்கு இரத்தம் கொதிக்கிறது.சில வருடங்களாக இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான சேப்படித் திருடர்களுக்கு பொதுமக்களால் தண்டனை கொடுக்கப்பட்டது.என்ன தண்டனை?அடித்தே கொன்றார்கள்!பாவம் சேப்படித் திருடர்கள்!அவர்களுக்கு நீதிமன்றப் படியேரக் கூட மக்கள் வாய்ப்புக் கொடுக்கவில்லை!என்ன நீதியோ?என்ன தர்மமோ?

26/08/2009 பதிந்தவர் vimalavan | பொதுவானவை | | No Comments Yet

தொழிலாளர்களின் பாதையிலே முதலாளிகளும்…!

flt-2இந்நேரம் தொழிலாளர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு செய்திருந்தால்,தொழிலாளர் தலைவர்கள் மிரட்டப்பட்டிருப்பார்கள்,வேலைநிறுத்தம் சட்டவிரோதம் என்றிருப்பார்கள்,வேலை நிறுத்த நாட்களுக்கு சம்பளம் இல்லை என கைவிரித்திருப்பார்கள்,தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் இந்தியப் பொருளாதாரம் சீரழிகிறது, இந்தியாவால் அந்நிய முதலீடுகளை ஈர்க்க முடியவில்லை என பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக எழுதுவார்கள்,இன்னும் ஒருபடி மேலே போய் ஆள் வைத்து தொழிலாளர்களை அடித்து துவைத்திருப்பார்கள்.

ஆனால் இங்கே வேலைநிறுத்தம் செய்யப்போவதோ முதலாளிகள்.அதுவும் விமான சேவை நிறுவன முதலாளிகள்.வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி வேலைநிறுத்தத்திற்கு நாள் குறித்துள்ளார்கள்.மொத்தமுள்ள எட்டு தனியார் விமான சேவை நிறுவனங்களில் ‘இண்டிகோ’ நீங்களாக மற்ற ஏழு நிறுவனங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போகிறார்கள்.அரசு இந்த வேலைநிறுத்தத்தை சட்டவிரோதம் என அறிவித்து, பேச்சுவார்த்தைக்கு அழைத்ததோடல்லாமல் தன்னுடைய இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மூலம் விமான சேவைக்கு பாதிப்பில்லாமல் செய்ய முயற்சிக்கிறது.

விமான சேவை நிறுவனங்களுக்கு  2008-2009 நிதியாண்டில் மட்டும் 10000 கோடி நஷ்டமாம்.இதில் அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மட்டும் சுமார் 2000 கோடி நஷ்டம்.அது ஏற்கனவே நிறுவன மருசீரமைப்பிற்காக அரசிடம் இருபதாயிரம் கோடி ரூபாய் கேட்டு கையேந்தியுள்ளது. இந்த நிதியாண்டும் விமானசேவை நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் நஷ்டம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.விமான எண்ணெய் வரி,விமான நிலைய பயன்பாட்டு கட்டணம்,தேய்மானம்,உலகப் பொருளாதார தேக்கநிலை, தீவிரவாத செயல்கள் ஆகியவற்றால் விமானசேவை நிறுவனங்கள் நஷ்டமடைந்துள்ளதாம். 

இந்த விமான சேவை நிறுவனங்கள் 2241 கோடி ரூபாய் அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு பாக்கி வைத்துள்ளார்கள்.இதில் கிங்க்பிஷேர் நிறுவனம் மட்டும் 950 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது.

இந்த நஷ்டங்களை ஈடுகட்ட பொருளாதார மீட்புக்காக இப்போது அரசிடம் உதவி கேட்கிறார்கள்.இது சில மாதங்களுக்கு முன்பு அமேரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல நிறுவனங்கள் அரசிடம் உதவிகேட்டு கையேந்தியதைப் போல இங்கே விமானசேவை நிறுவனங்கள் உதவிகேட்கிறார்கள்.

விமான சேவை நிறுவனங்களின் வேலை நிறுத்தத்தால் 99.99 சதவிகித இந்திய மக்களின் வாழ்க்கையில் பாதிப்பு இருக்கப்போவதில்லை தான்.இதைப் பற்றி பேசுவதால் ஏழைகளுக்கு என்ன பயன்? எனக் கேட்பதும் சரிதான்.  ஆனால் தங்கள் நிறுவன நஷ்டங்களை ஈடுகட்ட அரசு உதவவேண்டும் என கேட்பது எந்த வகையில் நியாயம்?அரசு எப்படி உதவும்?மக்களின் வரிப்பணத்தில் கை வைத்தால் தானே உண்டு?இதேபோல இலாபம் வரும்போது இலாப பணத்தை அரசுடன் பகிர்ந்துகொள்ள முன்வருவார்களா?

இதேபோல் தொழிலாளர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்தால் இதே தனியார் விமானசேவை நிறுவனங்கள் சும்மா இருந்திருப்பார்களா?நஷ்டத்திற்கு யார் காரணம்?விமான சேவை நிறுவனங்களா?அரசா? இல்லை ஆகாயத்தில் பார்த்ததைதவிர நேரடியாகக் கூட விமானத்தை கண்ணால் பார்க்காத கோடான கோடி எழைமக்களா?

உங்களுடைய நிர்வாக குறைபாடுகளுக்கு, திறமை குறைவுக்கு கோடான கோடி ஏழை மக்களா பொறுப்பேற்க வேண்டும்?

02/08/2009 பதிந்தவர் vimalavan | சிந்தனை | | No Comments Yet